tamilnadu

கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே அரசு பள்ளிகளில் ஆய்வகம் இல்லாத அவலம்

ஈரோடு, ஜூன் 3-சென்னிமலை அருகே உள்ள இரண்டு அரசு பள்ளிகள் கடந்த 13 ஆண்டுகளாக ஆய்வக வசதி இன்றி செயல்படுவதாக என அக்கிராமத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே பசுவபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 175 மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால், இப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் இல்லாத நிலை தொடர்கிறது. போதுமான போக்குவரத்து வசதியின்மை, ஆய்வக வசதி இன்மையால் மாணவ, மாணவியர் இப்பள்ளிக்கு வருவதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்று அறிவிக்கின்றனர். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ், மடிக்கணினி, ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை அமல்படுத்த உள்ளதாக தினமும் கூறி வருகின்றனர்.ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான ஈரோட்டில், கடந்த பத்து ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட கிராமப்புற பள்ளிகளில் ஆய்வக வசதி செய்து கொடுக்கப்படவில்லை.திப்பம்பாளையம் அரசு பள்ளியிலும், இதே நிலை உள்ளது. ஆய்வக வசதியுடன் இணைந்த கல்விதான் மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவே ஆய்வகம் என்பது மிகவும் அவசியமானதாகும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பல முறை முறையிட்டும் கிராமப்புற பள்ளிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதியை செய்து கொடுப்பதில் கூட அரசு அக்கறை காட்டவில்லை. பசுவபட்டி மேல்நிலை பள்ளிக்கு பஸ் வசதி கூட இல்லை. இரண்டு கி.மீ. துாரம் நடந்து பள்ளிக்கு வரும் அவலம் தொடர்கிறது. இவ்வாறு அரசு பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதி இல்லாமல் நசிந்து போகும் நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் தனியார் பள்ளிகளை வளர்ப்பதுதான் அரசின் நோக்கமாக கருதும் நிலை உள்ளது என தெரிவித்துள்ளனர்.