திருப்பூர், மே 7 –திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் அநாகரிகமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.இது குறித்து சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை ஒளிப்பதிவு செய்ய சென்று கொண்டிருந்த நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் கீரைத்துறை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் தடுத்து நிறுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சித்திருக்கிறார். மேலும் எப்.ஐ.ஆரோடு வந்து கைது செய்வேன் என மிரட்டியுள்ளார்.இச்சம்பவத்தை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அத்துமீறிய காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை தேவை என மதுரை மாநகர காவல் துறையை வலியுறுத்துவதுடன், காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.