(பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பாடிய பாரதியின் அடியொற்றி, இனி வரப்போகும் நவயுகத்தை அன்னையாய் உருவகித்து.....)
புரட்சி மலர்ந்தது யாம் செய்த போரால்;
“புன்மை இருட்கணம் போயின “ பாராய்!
வரட்சி மறைந்தது ; பொங்கின ஊற்று.
வளைந்தசைந் தாடுது மானிட நாற்று.
திரட்சிகொள் செங்கதிர் மனிதனைப் பாடி
சேவிக்க வந்தது ஒளிமலர் சூடி.
இருட்சிறை தகர்ந்தது நவயுகத் தாயே!
இக்கண மேபள்ளி எழுந்தரு ளாயே!
புயங்கள் புடைத்தனன் ஜெகத்தொழி லாளி ;
பூரித்த னன்அவன் வாழிபல் ஊழி!
ஜெயங்கள் இசைத்தது உழவனின் மேழி!
சிவந்தனள் பாரதி யின்கருங் காளி!
பயங்கள் தொலைந்தன; பாரடி தோழி!
பரிதியைப் பந்தடித் ததுஅலை ஆழி!
தயங்கல் இன்னும்ஏன் நவயுக தேவி?
தாய்அம்மை யேபள்ளி எழுந்தரு ளாயே!
மனிதனைத் தோள்களின் மீதெடுத் தாடி
மால், சிவன், நான்முகன் வந்தனர் ஓடி!
“இனித(ன்)னை வெல்பவர் எவர்?”எனக் கேட்டு
எழுந்தது மானுடம் பார்குதி போட்டு!
பனிதனை பொய்இருட் படலத்தை நீக்கி
பகலவன் வந்தனன் புதுப்புவி நோக்கி!
கனிதனை விஞ்சினை நவயுக நங்காய்!
கண்மணி யேபள்ளி எழுந்தரு ளாயே!
அத்தனை யுகத்திலும் அரும்பெரும் யுகமாய்
அன்னைநீ வந்தனை புவியினில் நவமாய்!
சத்தினைத் தந்தனை சாரமற் றோர்க்கும்!
சஞ்சலச் சொத்துட மைப்பேய் தோற்கும்!
வித்துநீ! ஞான விளக்கு நீ யார்க்கும்!
வித்தகி யேநின் அருள் முகம் பார்க்கும்
பித்தினைக் கொண்டேன்;நவயுக ராணி!
பெருமாட்டீ! பள்ளி எழுந்தரு ளாயே!
தகர்வது மனிதனைப் பூட்டும்வி லங்கு!
தளிர்ப்பது ஞானம்பன் னூறும டங்கு!
நுகர்வது வாழ்வெனும் அமுதக்கி டங்கு!
நுழைவது பொன்னுல கத்தின்அ ரங்கு
நிகர்எது மனிதனுக் கென்றுமு ழங்கு!
நினைப்பது அவனையே! வாழ்த்துவ ழங்கு!
நகர்வது கார் இருள்! நவயுக மாதா!
நாயகி யே! பள்ளி எழுந்தருளாயே!