பொள்ளாச்சி, மே 30- காட்டுயானை தாக்கி விடுமோ என்ற உயிர் அச்சத்தில் மொட்டைப் பாறைகளில் பொள்ளாச்சி சின்னார்பதி மலைவாழ் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள சின்னார் பதி மலைகிராமத்தில் 45 க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களில் நவமலை வனப்பகுதியில் அடுத்தடுத்து இரண்டு மனித உயிரிழப்புகளை காட்டு யானை ஏற்படுத்திச் சென்றது .தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலையீட்டை தொடர்ந்து இந்த யானையைவனத்திற்குள் விரட்ட ஞாயிறன்று மாலை டாப்சிலிப் யானை முகாமிலிருந்து பரணி என்ற ஒரு கும்கி யானையும், திங்களன்று சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானையும் வனத்துறையினரால் கொண்டுவரப்பட்டது. இன்றளவும் அந்த காட்டு யானையினை வனத்துறையினரால் வனத்திற்குள் விரட்ட முடியவில்லை. மாறாக காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறையினரையே நவமலை பகுதியிலுள்ள காட்டு யானை விரட்டிய சம்பவம் வனத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த காட்டு யானை அடிக்கடி ஆழியார் அணை ஓரத்தில் நீரைத் தேடி உலா வருவதால் சின்னார் பதி மலைவாழ் மக்கள்பயத்துடன் குடியிருப்பில் இரவில் தங்குவதில்லை. எந்த நேரமும் யானையால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் மலைவாழ் மக்கள் தங்களது உடமைகளுடன் வனப்பகுதியில் உள்ள மொட்டைப்பாறைகளுக்குச் செல்கின்றனர். புதனன்று இரவு பெய்த கொட்டும் மழையிலும்தங்களது குழந்தைகளுடன் மொட்டைப்பாறைகளில் தங்கியிருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் தலையிடுக
யானை தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக்கோரி வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதேபோல், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக சின்னார்பதி வனப்பகுதி குடியிருப்பில் உள்ள 5 மின் விளக்கு கம்பங்களும் தற்போது பயன்பாட்டில் இல்லை. மேலும் மின் வசதி கோரி கடந்த காலங்களில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களையடுத்து கோட்டூர் பேரூராட்சி கூடுதலாக 7 மின் கம்பங்களுக்கு நிதி வழங்கியது. ஆனால் இன்றளவும் இப்பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. ஏதேனும் உயிர்ச் சேதம் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே வனத்துறை இப்பிரச்சனையில் தீவிரம் காட்டுவது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், மலைவாழ் மக்களுக்குவனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பொள்ளாச்சி வனத்துறை வனச்சரகர் காசிலிங்கம் மீதுதுறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னார்பதி நவமலை உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இம்மக்களின் உயிர் சார்ந்த அச்சத்தை போக்கிடும் விதமாககோவை மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி வனத்துறை பழங்குடியின மக்களின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட வேண்டும். மேலும் மனித உயிர்களை துச்சமென நினைக்காமல் விரைந்து இப்பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.