tamilnadu

img

சிரிப்பே நமக்கான சிறப்பு

நமது உடலில் 108 நரம்புகள் நம் மூளையைத் தொடுகின்றன. அதில் எட்டு நரம்புகள் வேலை செய்யாமல் அமைதியாக இருப்பவை. மீதியுள்ள 62 நரம்புகள் சிரித்தால் வேலை செய்யக் கூடியவை. மேலும் 38 நரம்புகள் அழுதால் வேலை செய்யும். உடற் பயிற்சியில் அழும் உடற்பயிற்சியும் ஒரு வகையாகும். சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து இவற்றைச் செய்தால் நம் உடம்பின் உச்சி முதல் பாதம் வரை எல்லாவிதமான அவயங்களும் சுறுசுறுப்பாக வேலை செய்வதோடு அல்லாமல் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான இருதய அடைப்பு, மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி போன்றவை குணமாகும். அதோடு பான்கிரியாஸ் (ஞயnஉசநலயள) போன்ற பல்வேறு சுரப்பிகளில் இருந்து நமக்கு தேவையான நீர் தானாகவே சுரந்து விடுகின்றன. நாம் அதிகமாக சிரிக்கும் போது  பெரியவர்களாக இருந்தாலும் குழந்தைகள் போல் மாறிவிடுகிறோம். நம்மை அறியாமல் நாம் சாப்பிட வேண்டிய உணவு தானாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. நாம் எதைச் செய்தாலும் அதில் ஊன்றி, கவனத்துடன், மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யும் நிலை தானாகவே ஏற்படுகிறது. எவ்வளவு பெரிய மனஅழுத்தமாக இருந்தாலும் அது தானாகவே விலகி மறைந்து விடுகிறது. அதற்கு பிரதான காரணமே நம்முடைய இயல்பான சிரிப்புதான். இவை எல்லாவற்றிற்கும் மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தாலும் அந்த மாத்திரை குறையும் தன்மை ஏற்படுகிறது. பின்னர் அது தேவையே இல்லாமல் போனதும் உண்டு. பொதுவாக சிரிப்பு உடற்பயிற்சி செய்தவர்கள் பலர் ரத்த அழுத்தம் சர்க்கரை ஆகியவை குறைந்து நலம் பெற்றிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட, தூக்கத்தில் இருந்து எழுந்து, பின்னர் இரவு படுக்கைக்குப் போகும் வரை கைபேசி இல்லாமல் இன்று ஒருவராலும் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முக்கால் மணிநேரம் நீங்கள் உங்கள் கைபேசியை மறந்து இருந்தால் அதுவே ஒரு பெரிய விஷயம் இல்லையா? அது மட்டுமல்லாமல், இன்று சிரிப்பதையே மறந்து நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சிரிப்பு உடற்பயிற்சியினால் சிரிக்கவும் சரி, உடல் நிலையைச் சீராக்கவும் முடிகிறதென்றால் அதுவே மிகப் பெரிய விஷயம் தானே? இதில் சிறப்பு என்னவென்றால், இவை அனைத்துமே இலவசம்தான். ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? எனவே சிரித்து பழக கற்றுக் கொள்ளுங்கள். சிரிப்பே நமக்கான சிறப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இயல்பாய் இரு

கிரேக்க நாட்டில் டயஜீனிஸ் என்ற தத்துவ ஞானி இருந்தார். பட்டப் பகலில் கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டு ஒரு ஞானி, மனிதனைத் தேடியதாகப் படித்திருக்கிறோம் அவர்தான் இவர். அவர் ஒருநாள் ஆற்றங்கரையில் தனது நாயோடு நிர்வாணமாக-எப்போதும்போல அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாவீரன் அலெக்சாண்டருக்கும் அவருக்கும் நடந்த உரையாடல் இது. அலெக்சாண்டர் அப்போது இந்தியாவுக்குப் போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
"எங்கே போகிறீர்?  எதற்காக?"
"நான் ஆசியாவுக்குச் செல்கிறேன். அதை வெற்றி கொள்ளப் போகிறேன்"
"அதற்குப் பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?"
"பிறகு இந்தியாவை வெற்றி கொள்வேன்"
"அதற்குப் பிறகு?"
"அதற்குப் பிறகு நன்றாக ஓய்வெடுப்பேன்"
அலெக்சாண்டரின் இந்த பதிலைக் கேட்ட டயஜீனிஸ் வாய் விட்டுச் சிரித்தார். தனது நண்பனான நாயைப் பார்த்துச் சொன்னார்; "இந்தப் பைத்தியக்காரனைப் பார்த்தாயா, உலகத்தை வெற்றி கொண்ட பிறகு நிம்மதியாக ஓய்வெடுக்கப் போகிறானாம். நாம் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம், இந்த உலகத்தை வெற்றி கொள்ளாமலே? நிம்மதிக்கும் ஓய்வுக்கும் உலகை வெற்றி கொள்வதற்கும் எந்த சம்பந்தமுமில்லை."
டயஜீனிஸின் இந்த பதில் அலெக்சாண்டரைச் சிந்திக்க வைத்தது. அவர் சொன்னார்: "ஐயா, நீங்கள் சொல்வது அர்த்தமுள்ளதாகத்தான் உள்ளது. ஆனால் நான் இப்போது ஓய்வெடுக்க முடியாது. முதலில் இந்த உலகை வெல்ல வேண்டும். நான் என் பயணத்தை ஏற்கெனவே துவக்கி விட்டேன். பாதியில் திரும்ப முடியாது" என்றார். "நீ திரும்புவாய்" என்றாராம் டயஜீனஸ். அவர் சொன்னது போலவே இந்தியாவிலிருந்து திரும்பி வரும்பொழுதுதான் அலெக்சாண்டர் கிரேக்க நாட்டுக்குத் திரும்ப முடியாமல் வழியிலேயே இறந்தார்.
இங்கே நமக்கு முக்கியமானது டயஜீனிஸின் தீர்க்க தரிசனம் அல்ல. அவர் அலெக்சாண்டருக்குச் சொன்ன முக்கியமான செய்தி "இயல்பாக இரு" என்பதுதான். உலகையே வெற்றி கொள்வதும் அதில்தான். அதாவது 'இயல்பாய் இரு" என்ற ஒரு அம்சத்தில்தான் அடங்கியுள்ளது.