கோவை, மே 12-காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால் கோவை மண்டலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களிலும் திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும் காற்றாலை மின் உற்பத்திசெய்யப்படுகிறது. மேற்கு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சுமார் 9,400 காற்றாலைகள் மூலமாக தினமும் சராசரியாக 10 ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவில் இருக்கும். காற்றாலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, பின்பு பிரித்து வழங்கப்படுகிறது. எனவே, காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகளவு இருக்கும் போது மின்வெட்டு இருக்காது. இந்நிலையில் தற்போது காற்றின் வேகம் மிகவும் குறைந்துள்ளதால் கோவை மண்டலத்தில் மின்வெட்டுஏற்பட்டு வருகிறது. கோவை மண்டலத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகளவில் இருப்பதால் தினமும் 2,400மெகாவாட் மின் தேவை இருக்கிறது. இதில், காற்றாலை மூலம் 1,250 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. கோவை மண்டலத்தில் ஒரு நாளில் சுமார் 45 மில்லியன்யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால், காற்றாலை மின்உற்பத்தி அடியோடு குறைந்துள்ளது. அவ்வப்போது பூஜ்ஜியம் என்ற நிலைக்கும் காற்றாலை மின் உற்பத்தி செல்கிறது. இதனால், கடுமையாக மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையான அளவிற்கு மின்விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை மண்டலத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மாநகரப் பகுதியில் சில இடங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், சிறு,குறு தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், கோடை காலத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து கோவை மண்டலமின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “காற்றின் வேகம் குறைந்து இருப்பதால், காற்றாலை மின்உற்பத்தி திடீரென பூஜ்ஜியம் என்ற நிலைக்கு செல்கிறது. இதனால் காற்றாலை மின்உற்பத்தி குறைந்துள்ளது. அப்போது, மின்சாரத்தைமாற்றி வழங்க நேரம் தேவைப்படுகிறது. இதனால், 15 முதல் 20 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. அடுத்த மாதம் காற்றின் வேகம்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காற்றாலை மின்உற்பத்தி அதிகரிக்கும். மின்வெட்டு பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்” என்றனர்.