குப்பைத் தொட்டியில் குப்புறக் கிடந்த பிரேதம் பெண்ணாக இருந்ததால் விசயம் காட்டுத்தீ போல் பரவியது. அதே ஆணாக இருந்திருந்தால் குடிகாரன் என கவனித்திருக்க மாட்டார்கள். உயிர் அவள் கண்கள் வழியாக வெளியேறி இருக்க வேண்டும். இன்னும் அதில் வாழ்விற்கான ஏக்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் எவ்வளவு காலம் சாப்பிடாமல் இருந்தாள் என்று தெரியவில்லை. இரைப்பை காலியாக இருந்தது. இறப்புக்கு பட்டினிச்சாவு என அறிக்கையில் காரணம் எழுத அரசு மருத்துவருக்கு கூச்சமாக இருந்தது. உடலுக்கு யாரேனும் உரிமை கோருகிறார்களா? என காவலரிடம் மருத்துவர் கேட்டார்.இல்லை என அவர் தலையாட்டியது மருத்துவருக்கு வருத்தமாக இருந்தது.
அவன் தன் வயதான தாயை தேடிக் கொண்டிருந்தான். யாரிடமும் வாய் திறந்து விசாரிக்க அவன் பயப்பட்டான். அவளுக்கு அவனால் உணவு வழங்க முடியவில்லை. வைத்தியமும் பார்க்க முடியவில்லை. ஒரு பொட்டலமாக மூலையில் சுருண்டு கிடந்தாள். அவனுக்கு அவளை விட்டால் வேறு யாரும் இல்லை. அவனது அழுக்கடைந்த உடம்பும் கிழிந்து போன உடையும் சோற்றில் உட்காரும் ஈ ஆக அவன் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டான். அவனுக்கு இருந்த ஆகப்பெரும் கவலையெல்லாம் அவள் செத்துவிட்டால் என்ன செய்வது என்பது தான். அவளுக்கும் இந்த கவலை இருந்திருக்கும் போல.ஒருவேளை சுடுகாட்டில் சென்று படுத்துக் கொண்டாளோ..!?
அவன் கடைசியாக சுடுகாட்டை நோக்கிச் சென்றான். ஒரு குழிமேட்டின் மீது அம்மா கடைசியாக அணிந்திருந்த நைந்து போன நைட்டித் துணி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அம்மாவின் முகத்தைப் பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்து ஒருவரும் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டவன் அம்மா.. என வாய் திறந்து சத்தமாக அழைத்தான். பதிலுக்கு, மகனே.. என ரகசியமாக அம்மா அழைத்தது அவனுக்கு மட்டும் கேட்டது.அதற்குப் பிறகு அவன் அங்கயே அம்மாவுக்கு துணையாக இருந்து கொண்டான். தினமும் அருகில் தேங்கி இருக்கும் ஆற்றுநீரில் குளித்து விட்டு நெற்றி நிறைய சுடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொள்வான். பிறகு நாள் முழுக்க அம்மாவிடம் முணுமுணுத்துக் கொண்டிருப்பான்.அது மந்திர உச்சாடணம் போல மக்களுக்கு கேட்டது.படையலிட்டு அவனிடம் சுடுகாட்டுச் சாம்பலை பெற்றால் ஐஸ்வர்யம் பெருகும் என நம்பிக்கை விதைத்தவர்கள் அவன் பெயரால் அறக்கட்டளையை துவக்கி கோடி கோடியாய் வசூலித்து ஆன்மீகப் பணியில்(?) ஈடுபட்டுள்ளனர்.