tamilnadu

img

மார்க்சியத்தின் மறுபொருள் விடுதலை

கோவை, மே 17-மார்க்சியத்தின் மறுபொருள் விடுதலை, பேரன்பின் உச்சம் மார்க்ஸ் என கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் தெரிவித்தார்.மாமேதை காரல் மார்க்சின் 201 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கங்கள் நாடு முழுவதும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக்கழகம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் உள்ளிட்ட வழக்கறிஞர் அமைப்புகள் இணைந்து கோவையில் அண்ணாமலை கூட்டரங்கில் சிறப்பு கருத்தரங்கம் நடத்தியது. இக்கருத்தரங்கிற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியின் நிர்வாகி த.மலரவன் தலைமை தாங்கினார். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், தீக்கதிர் நாளிதழின் ஆசிரியருமான கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

அவர் பேசுகையில், காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் நாடற்றவன் என விரட்டியடிக்கப்பட்டார். வறுமை அவரது வீட்டில் நிரந்தரமாக குடிகொண்டது, இறந்த பிறகும் அடையாளமற்றவர், நாடற்றவர் என்கிற நிலையில்தான் மார்க்சும், ஜென்னியும் புதைக்கப்பட்டார்கள். இத்தகைய மார்க்ஸ் நினைக்கப்படும் போதெல்லாம் அவரின் சரி பாதி இதயமாய் இருக்கிற ஜென்னியும், ஏங்கல்சும் நினைக்கப்பட வேண்டியவர்களாய் உள்ளார்கள். இறந்த பிள்ளையை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கக்கூட பணமில்லாமல் உடலை அடுத்த அறையில் கிடத்திவிட்டு ஒரு இரவை கழித்த கொடுமையும், வீட்டை ஜப்தி செய்த பின்னர் நடுத்தெருவில் பிள்ளைகளோடு ஜென்னி நின்றபோதும், பொருள் ஈட்ட தனது சிந்தனையை செலுத்தாமல், மனித குலத்தின் விடியலுக்காக தனது ஆயுளை அர்ப்பணித்தவர் மார்க்ஸ். ஆகவே, மார்க்ஸ் நம்முடைய பெரும் காதலுக்குரியவர், நம்மை சிந்திக்க வைத்தவர். நாம் நிமிர்ந்து நிற்கிறோம் என்று சொன்னால் அதற்கான மகத்தான தத்துவத்தை உலகிற்கு வழங்கியவர். மனிதர்களை நேசிக்க முடியாத, அன்பு செலுத்த முடியாத, அடுத்தவன் உழைப்பை சுரண்டுகிற சமூகத்தில், சக மனிதனை போட்டியாளனாக, எதிரியாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிற சமூக சூழலில், அனைத்தும் மாறும், மாற்ற முடியும், மாறும் என்கிற சொல்லைத்தவிர அனைத்தும் மாற்றத்திற்கு உள்ளாகும் என்கிற கோட்பாட்டைத் தந்தவர் மார்க்ஸ். மார்க்சியம் அறிவு ஜீவிகளுக்கானது என்கிற கருத்து உருவாக்கப்படுகிறது. ஆனால் மார்க்சியம் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தத்துவம். இது எளிய மக்களுக்கானது, உழைக்கும் மக்களுக்கானது. மனித பேரன்பின் உச்சம் மார்க்சியம். இதனை பொருத்தமான முறையில் கொண்டு போய் சேர்க்காதது நம்முடைய பிழையே.

மார்க்ஸ், முரண்பாடுகள் குறித்து ஏராளமாக பேசியிருக்கிறார். முரண்பாடுகள் இரண்டு வகைப்படும். ஒன்று நேச முரண்பாடு, மற்றொன்று பகை முரண்பாடு. நமக்குள்ளான முரண்பாடுகள் நேச முரன்பாடுகள். இதனைப் பேசித் தீர்க்க முடியும். ஆனால் பாசிசத்திற்கு எதிரான மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிஸ்டுகளுக்குமான முரண்பாடு பகை முரண்பாடு. இதில் ஒன்று அழிந்தால்தான் மற்றொன்று நீடிக்க முடியும். இன்று நம் முன் உள்ள கேள்வி யார் நின்று நிலைப்பது என்பதுதான். மார்க்சியம் அடிப்படையில் ஒரு விஞ்ஞானம். பாட்டாளி வர்க்கம் வென்றுதான் தீரும். லெனின் சொல்வார், பாட்டாளி வர்க்க இயக்கங்கள் நூறு முறை வீழும், நூறு முறையும் எழும். இதுதான் உலகின் வரலாற்று அனுபவம். மக்களின் கோபத்தை மோடி, டிரம்ப் போன்ற வலதுசாரிகள் மடை மாற்றுகிறார்கள். மக்களின் கோபத்தை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும். அதைத்தான் ரஷ்யாவில் லெனின் நடைமுறைப்படுத்தினார். வியட்நாமில் ஹோசிமின், சீனாவில் மாசேதுங், கியூபாவில் பிடல், சே போன்ற தலைவர்கள் முன்னெடுத்தார்கள் வெற்றி பெற்றார்கள். 

முதலாளித்துவம் முடிவுக்கு வருவதும், உலகத்தில் சோசலிச சமூகம் அமைவதும், அது கம்யூனிசத்தை நோக்கி நகர்வதும் தவிர்க்க முடியாத விதி. எனவே, முதலாளித்துவம் தனக்கான அழிவுகளை தனக்குள்ளேயே வைத்திருக்கிறது என்றார் மார்க்ஸ். ஆகவே தான் ஆயிரம் ஆண்டில் உலகின் தலைசிறந்த சிந்தனையாளனாக பிபிசி நடத்திய ஆய்வில் காரல் மார்க்சை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தியாவில் வர்க்கத்திற்கும், சாதியத்திற்குமான இயங்கியலை புரிந்து கொள்ளாமல் நம்மால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இங்குதான் அம்பேத்கரும், பெரியாரும் நமக்கு துணை நிற்கிறார்கள். அந்த வகையில் மார்க்சியத்தை வெகுமக்களிடம் கொண்டு செல்வோம். இவ்வாறு கூறி மதுக்கூர் இராமலிங்கம் தனது உரையை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நிர்வாகி வி.பி.குணசேகரன், மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் பாலமுருகன், திராவிடத் தமிழர் கட்சியின் வெண்மணி, சமத்துவ கழகம் கார்க்கி, சிபிஐ (எம்எல்) ரெட் ஸ்டார் குசேலன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஜோதிக்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சாஜூ உள்ளிட்டோர் உரையாற்றினர். மேலும், இக்கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் கோபால் சங்கர், லூயிஸ், பிரகாஷ், சக்திவேல், சத்தியபாலன், அண்ணாதுரை, நிக்கோலஸ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.