திருப்பூர், மே 15 - ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் குளறுபடி காரணமாக மறு வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியில் காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேர்தலின்போது வாக்குச்சாவடி (எண் -248) அமைக்கப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அவை அழிக்கப்பட்டு, முறைப்படி வாக்குப்பதிவு தொடங்கும். ஆனால் இந்த வாக்குச்சாவடியில், மாதிரியாக பதிவு செய்யப்பட்ட 50 வாக்குகள் அழிக்கப்படாமல், தொடர்ந்து வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டது.இருப்பினும், வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்துள்ளது. திருமங்கலம் வாக்குச்சாவடியில், ஆவணங்களின்படி மொத்தம் 736 வாக்குகள் பதிவாகி உள்ளது. இவற்றுடன் 50 மாதிரி வாக்குகளை சேர்த்தால் 786 வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 777 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த காரணத்தை முன் வைத்து, மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.வரும் 19ஆம் தேதி அன்று திருமங்கலம் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.சாகுல்ஹமீது கூறியதாவது: ”பணியின் போது கண்காணிக்க வேண்டிய விஷயத்தை கண்காணிக்காமல் விட்ட, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தான் இதற்கு பொறுப்பு. ஆகவே கடந்த ஏப். 18ஆம் தேதி திருமங்கலத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக பணியாற்றிய உடுமலைப்பேட்டை புங்கமுத்தூர் ஆசிரியர் பி.லோகநாதன் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.