tamilnadu

img

மோடி அரசின் 100 நாள் ஆட்சி சாதனையல்ல வேதனை - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு  

பாஜக தலைமையிலான மோடி அரசின் இந்த 100 நாட்கள் சாதனையல்ல நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் உண்மையில் நூறு நாட்களின் ஆட்சி வேதனையாகவே உள்ளது என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
 
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திங்களன்று செய்தியாளர்களை  சந்தித்தார்.
 
அப்போது அவர் கூறுகையில், வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக பாஜக  அரசு பல சாதனைகள் செய்து இருப்பதாகவும்  100 நாள் சாதனை என அமித்ஷா கூறியிருக்கின்றார். உண்மைக்கு மாறாக பாஜக அமைச்சர்கள் கூறிவருகின்றனர். தற்போது கடுமையான நெருக்கடியை நாடு சந்தித்து வருகின்றது.  70ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் தெரிவித்துள்ளார். இக்காலத்தில் நாடு முழுவதும்  3.50 லட்சம் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மட்டும்  60 ஆயிரம் டைமன்ட் தொழிலாளர்கள்  வேலை இழந்துள்ளனர் என தற்போது செய்தி வந்துள்ளது. இந்தியாவில் வேலை இழப்பு மிகப்பெரிய பிரச்சினையாக ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 50 ஆயிரம் சிறுகுறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டு  5 லட்சம் தொழிலாளர்கள்  வேலை இழந்து இருப்பதாக  தொழில் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். நொடிந்த தொழில்களை மீட்க மாநில அரசும் எவ்வித முயற்சியும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்நிலை தற்போது மேலும் மோசமாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வேலை இழப்பு மேலும்   அதிகரித்துள்ளது.
கோவை, திருப்பூர்,சேலம், ஈரோடு, சென்னை உட்பட பல்வேறு தொழில்  மாவட்டங்கள்  கடும் நெக்கடியை சந்தித்து வருகிறது. கோவையில்  இஞ்சினியரிங், பவுண்டரி, மோட்டார் பம்ப், லேத் உள்ளிட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வெளியேறும் நிலை 
ஏற்பட்டுள்ளது. கோவையில் மோட்டார் பம்ப்   உற்பத்தியில் ஈடுபடும் பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டு இருக்கின்றது.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதே இதற்கு காரணம். அப்படியென்றால் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து போயுள்ளது என்பதை அரசு உணர வேண்டும். ஆனால் மத்திய அரசு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக பொதுச் செலவீனங்களை குறைப்பது, திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது போன்றவற்றால் நெருக்கடியை அதிகப்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில்தான் தொழில் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க கோவை  மாவட்ட சிஐடியு மாவட்ட குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மாநாடு வரும் 13ம் தேதி கோவையில்  நடத்தப்பட உள்ளது. இதில் கொடிசியா, சீமா, தொழில்வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளனர். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவையே இந்த பொருளாதார 
நெருக்கடிக்கு காரணம். சிறு, குறு தொழில்களுக்கான ஜிஎஸ்டியை 
குறைக்க வேண்டும். ஜாப் ஆர்டருக்கு முற்றிலும் ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்க உள்ளோம் என்றார்.
 
மூலதனத்தை கொண்டு வர முதல்வர் வெளிநாடு செல்வது சரியானதுதான் என செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், ஆனால்  தமிழகத்தில் அரசு நிர்வாகம் முறையாக செயல்படவில்லை. உதாரணத்திற்கு பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செலவு செய்து கால்வாய் வெட்டியுள்ளனர். அதனை அரசு கணக்கு காட்டி ஐந்து லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக ஒரு செய்தி வருகிறது. இதேபோல  20 மாணவர்களுக்கு குறைவான 3000 பள்ளிகளை மூடுவது  என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 3 வயது முதல் 18 வயது வரை இலவச கல்வி என சட்டம் உள்ளது. அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு எப்படி இலவச கல்வி சாத்தியமாகும். அதே வேளையில் கேரளாவில் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 
அரசு பள்ளிக்கு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்திருக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.