tamilnadu

மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவர் கைது

 பொள்ளாச்சி, ஆக.31 - பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்று கிணற்றில் வீசி நாடகமாடிய கணவரை ஒரு மாதத்திற்கு பிறகு காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆர்.பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (32). இவரது மனைவி கௌசல்யா (25). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தன் மனைவி கவுசல்யாவை காணவில்லை என பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்துள் ளார். இதுகுறித்து விசாரித்து வந்த காவல் துறையினருக்கு சக்திவேல் மீது சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து சக்திவேலிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  இந்த விசாரணையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி யன்று ஏற்பட்ட குடும்பத் தகராறில் தனது மனைவியை சக்திவேல் அடித்து கொலை செய்ததாகவும், அவரது சடலத்தை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வெள்ளியன்று சக்தி வேலை கைது செய்த பொள்ளாச்சி தாலுகா காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.