தருமபுரி, ஜூலை 18- தருமபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் இரு சக்கரவாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி தருமபுரியில் நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன்பு துவங்கிய இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் துவக்கி வைத்தார். பின்னர் தருமபுரி நான்கு வழிச்சாலையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் பேசுகையில், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படியும், தமிழக அரசு உத்தரவுப்படியும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி மற்றும் மக்களிடையே துண்டுப்பிரசுரம் விநியோகம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னாள் அமர்ந்து இருப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்துள்ளது. எனவே ஹெல்மெட் அணிந்து உயிரை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தருமபுரி மாவட்ட காவல் துணை கண் காணிப்பாளர் ராஜ்குமார், நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் உள்ளிட்ட காவலர்கள் பங்கேற்றனர்.