tamilnadu

img

நிலவில் ஹீலியம் எடுக்கும் தொழிற்சாலை

அமெரிக்க திட்டம் குறித்து இந்திய விஞ்ஞானி தகவல்

நாகர்கோவில், நவ.11- பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,  இந்தியாவை உலக அரங்கில் முதன்மை  நாடாக முன்னிறுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்டது தான் பிரம்மோஸ் ஏவுகணை. அமெரிக்கா கண்டு பிடித்த ஏவுகணைகளை விட அதிக சக்தி உடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது. சந்தி ரயான், மங்கள்யான் ஆகிய செயற்கைக் கோள்கள் சிறப்பாக செயல்பட்டு அங்குள்ள தகவல்களை அனுப்பி வருகின்றன. இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட அப்பல்லோ செயற்கை கோளானது நிலவில் உள்ள கற்களை படம்பிடித்து வந்துள்ளது.

இதுவரை நிலவில் ஆய்வு செய்வதற்காக 48 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு தோல்வியடைந்துள்ளன. எந்த நாடாக இருந்தாலும் முதல் முயற்சி யில் வெற்றி அடைய வேண்டுமென்ற இல்லை. நிலவில் ஆய்வு செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியா விடம் உள்ளது. 2020ஆம் ஆண்டு அமெரிக்கா நிலவில் ஹீலியம் எடுப்பதற்கான தொழிற்சாலையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.  இந்தியாவில் தொழில் நுட்பம் வளர்ச்சிக்கான இடைவெளி உள்ளது. இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சி  செய்வதில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. எந்த நாடு விண்வெளி ஆராய்ச்சியில் முன்நிலையில் இருக்கிறதோ அந்த நாட்டுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.  பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய அறுவடை முடிந்ததும் நிலங்களில் உள்ள கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாகவே தில்லியில் காற்று  மாசு ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

;