சேலம், பிப்.28- சேலத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், அரசு பொது சுகாதார துறை அலுவலர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உணவு விடுதிகளுக்கான சுகாதார மதிப்பீட்டு திட்டம், உண்பதற்கேற்ற நம்பிக்கையான இடமாக அறிவித்தல் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளுக்கான சரியாக உண்ணும் வளாகமாக அறிவித்தல் திட்டம், எளிய முறையில் உணவு கலப்படத்தை கண்டறியும் பயிற்சி முகாம்கள் நடத்தப் பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலைய கட்டுப் பாட்டில் உள்ள கோவில்களில் சுகாதார மான பிரசாதங்கள் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதன் ஒரு பகுதி யாக கோவில்களில் அன்னதானம் வழங்கு வோர், பிரசாதம் தயாரிப்போருக்கான சிறப்பு உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாகிய ஏற்காடு ஏரிப் பகுதியை சுத்தமான சாலையோர உணவுப் பகுதியாக அறிவிக்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. உணவு விடுதிகள், பேக்கரிகளில் ஒரு முறை பயன்படுத்தப் பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து பயோ டீசல் தயாரிக்கும் முறை விரைவில் நடை முறைக்கு வரவுள்ளது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தன்னார்வலர்கள் மூலம் உணவை வீணாக்காதீர் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் உணவுவிடுதிகள், திருமண நிகழ்வுகள் போன்ற இடங்களில் மிகுதியாகும் உணவு சேகரிக்கப்பட்டு அவை தேவைப்படும் நபர்களுக்கும், குழந்தைகள், முதியோர் காப்பகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஜவ்வரிசி மற்றும் கரும்பு வெல்லம் தயாரிப்பில் அனுமதிக்கப்படாத வேதிப் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தடை செய்வதற்கான தொடர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாழை, மாம் பழங்களில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தி வந்த கார்பைடுகல் உபயோகம் முற்றிலும் தடைசெய்யப்பட்டு விட்டது. தற்போது எத்திபான் என்னும் வேதிப் பொருள் பயன்பாடு முறைப்படுத்தப் பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் கடந்த மாதத்தில் நடத்திய திடீர் ஆய்வுகளில் 48 கடைகளிலிருந்து 726.41 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப் பட்டு ரூ.26 ஆயிரம் அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது. திறந்தவெளி இறைச்சி கூடங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் வதைக் கூடங்கள் அமைக்கப்படுவதற்காக உள்ளாட்சி நிர்வா கத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.கதிரவன், அரசுத் துறை அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.