கோவை, மே 29- பயறுவகை பயிர்கள் சாகுபடியில் இலைவழி ஊட்டம் அளிப்பதன் மூலம் 20 சதவிகிதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப் பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு உள்பட பல்வேறு பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்கள் உற்பத்தியில் பயறுவகை பயிர்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் வேளாண் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.ஆனால், போதிய சாகுபடி தொழில்நுட்பம் தெரியாமல் பயறுவகை பயிர்களில் உரிய விளைச்சலை பெற முடியாத சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் பயறு வகை பயிர்கள் சாகுபடியில் இலைவழி ஊட்டம் அளிப்பதன் மூலம் கூடுதலாக 20 சதவிகிதம் மகசூலை பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.பானுமதி கூறியதாவது, பயறுவகை பயிர்கள் சாகுபடியில் தொழு உரம் பயன்படுத்துதல், விதை நேர்த்தி செய்தல் ஆகிய தொழில்நுட்பங்களை மட்டுமே அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எதிர்பார்த்த மகசூலை எடுத்தாலும் கூடுதல் விளைச்சலை பெறமுடியவில்லை.இந்நிலையில் டிஏபி கரைசலை இலைவழி ஊட்டமாக கொடுப்பதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயறுவகை பயிர்களின் சாகுபடியில் பூக்கும் பருவத்தில் 20 கிராம் டிஏபியை 1 லிட்டர் தண்ணீர் வீதம் ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி கரைசலை இலைவழி ஊட்டமாக அளிக்கலாம். இலைவழி ஊட்டம் என்பது சுலபமான வழியாகும். இதன்மூலம் பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவை போதிய அளவு கிடைக்கின்றன.இதனால் பூக்கள் உதிர்வு குறைந்து அதிக அளவிலான காய்கள் பிடிக்கின்றன. மேலும் பருப்புகளின் தரம் அதிகரிப்பதுடன், எடையும் கூடுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 10 முதல் 20 சதவிகிதம் வரை மகசூலும் அதிகரிக்கின்றன என்றார்.