கோவை, மே 29-வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டார். கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடித்து புகைமூட்டம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் இந்தக் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை இரவு பகலாக போராடி தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அணைத்தனர். இதனையடுத்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளைகோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி மற்றும் மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.