கோவை, மே 25-கோவை இருகூர் அருகே சனியன்று பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பஞ்சு எரிந்து சாம்பலானது.கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் இருகூர் பகுதியில் சுமார் 7 ஆண்டுகாலமாக பஞ்சு சேமிப்புக் கிடங்கு வைத்துள்ளார். இங்கு சேமித்து வைக்கும் பஞ்சுகளை பஞ்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பஞ்சினை வாங்கி கிடங்கில் வைத்திருந்தார். இந் நிலையில், சனியன்று காலை அந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதைக்கண்ட அருகே இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயானது கட்டுக்குள் அடங்காததால், மேலும் மூன்று வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து போராடி தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம்தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.