tamilnadu

பட்டுக் கூடுகள் விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

 கோவை, ஜூன் 20- கோவையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பட்டுக் கூடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை, பாலசுந்தரம் சாலையில் பட்டு வளர்ச்சித் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டுக்கூடு அங்காடி உள்ளது. தொண்டாமுத்தூர், அன்னூர், சூலூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டுக்கூடு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 ஆயிரத்து 643 ஏக்கரில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயி கள் பட்டுக்கூடுகளை அங்காடிக்கு 25 நாட்களுக்கு ஒரு முறை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.  நாளொன்றுக்கு சராசரியாக இங்கு ஒரு டன் பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வரும் நிலையில், கடந்த சில தினங்களாக சுமார் இரண்டு டன் அளவிலான பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வருகின்றன. புதனன்று நிலவரப்படி அங்காடிக்கு 2 ஆயிரத்து 162 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. கடந்த வாரம் இதே நாளில்  453 கிலோ பட்டுக்கூடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.  இதுகுறித்து பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், மார்ச், மே மாதம் வரை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பட்டுக்கூடுகள் உற்பத்தி குறைந்தது. தற்போது வெயில் தாக்கம் குறைந்து மழை காலம் தொடங்கியதால், பட்டு கூடுகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் வரையில் பட்டுக்கூடுகள் வரத்து அதிகமா கவே இருக்கும் என்றனர்.  இதன்படி புதன்கிழமை  2 ஆயிரத்து 162 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.419க்கு விற்பனை யானது, குறைந்தபட்சமாக ரூ. 256க்கும், சராசரியாக ரூ.369க்கும் விற்பனையானது. மொத்தமாக ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 249க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது. தற்போது விலையும் எதிர் பார்த்த அளவில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.