tamilnadu

ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிடுக

தருமபுரி, ஜூலை 14- பி.பள்ளிப்பட்டியில், குளத்து மடக்கு ஏரி நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி வருவாய் கிராமத்தில் குளத்து மடக்கு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், மழைக் காலங்களில் இங்குள்ள ஏரியில் மழைநீர் தேங்குவதில்லை. இந்த ஏரியில் மழை நீர் தேங்கினால், இப்பகுதியிலுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், குடி நீர் பிரச்சனைகள் தீரும். எனவே, பி.பள்ளிப்பட்டி குளத்து மடக்கு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

;