tamilnadu

img

யானைகள் நடமாட்டத்தை தடுக்க உதகை மலைப்பாதையில் பலாப்பழங்கள் விற்க தடை 

மே.பாளையம், மே 30-மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பலாப்பழங்களை வைத்து விற்பனை செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. நீலகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்தே குன்னூர் வழியே உதகை செல்லும் மலைச்சாலை அமைந்துள்ளது. கோவைமாவட்டத்தின், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் முதல் பர்லியார் வரையிலான குன்னூர் செல்லும் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. மலைக்காட்டை ஊடுருவிச் செல்லும் இச்சாலையினை ஓட்டியுள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி,காட்டெருமை, மான், குரங்கு என பல்வேறு வன உயிரினங்கள் இருந்தாலும், இங்கே யானைகளின் எண்ணிக்கையே அதிகம். தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி இங்குள்ள மரங்களில் கொத்து கொத்தாய் பலாப்பழங்கள் காய்த்து பழுக்க துவங்கியுள்ள நிலையில் இவற்றை விரும்பி உண்ணும் யானைகளின் வருகையும் நாளுக்குநாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் சமவெளி பகுதியில் இருந்து மலை சார்ந்த வனப்பகுதிக்கு யானைகள் இடம்மாறுவது வழக்கம். இவ்வாறு இடப்பெயர்ச்சி நடைபெறும் சமயத்தில் பலாப்பழங்களின் வாசனையை நுகரும் யானைகள் இவற்றைத் தேடி சாலையில் சுற்றித் திரிகின்றன. இதற்காக பலாமரங்களை தேடி இரவு பகல் எனஎந்த நேரமும் சாலையோரங்களில் நடமாடுவதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் உள்ளூர் மக்களும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையில், இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையோரத்தில் பலாப்பழங்களை வைத்து விற்பனை செய்து வருவது அபாயத்தை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் பலாப்பழங்களை வைத்து விற்பனை செய்யத் தடை விதித்துள்ள வனத்துறை, சாலையோரம் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் உள்ள பலாமரங்களில் உள்ள பழங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளனர். இதனை மீறுவோர் மீது வனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இதனையடுத்து சாலையோரம் இருந்த தற்காலிக பலாப்பழக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதோடு மரங்களில் உள்ள பழங்களும் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.