tamilnadu

img

திமுக மூத்த தலைவர் “தென்றல் மு.இராமநாதன்” மறைவு

கோவை, மே 10-திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரான மு.இராமநாதன் கோவையில் காலமானார். இவரின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.திமுகவின் மூத்த தலைவரான “கோவை தென்றல்” என அழைக்கப்படும் மு.இராமநாதன் (87) வயது முதிர்வு காரணமாக வெள்ளியன்று காலமானார். இவர் திமுகவின் கோவை மாநகர் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், தற்போது உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். முன்னதாக, 1970 முதல் 1976 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1985, 1989ல் சட்டமன்ற உறுப்பினராகவும், 1996 ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம், இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டப்பிரிவை எரித்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில்ஈடுபட்டு மிசா தண்டனை கைதியாக சிறை சென்றவர். இவரை கௌரவிக்கும் வகையில் 1993 ல் தலைவர் கலைஞர் இவருக்கு “அண்ணா விருது” வழங்கினார். 87 வயதான மு.இராமநாதன் உடல் நலக்குறைவால் வெள்ளியன்று கோவையில் காலமானார். இவருக்கு இராமகாந்தன் என்ற மனைவியும், பன்னீர்செல்வம், இளங்கோ, மு.ரா.செல்வராஜ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.கோவை ராஜ வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த மு.இராமநாதன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மறைந்த மு.இராமநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தில்தொடங்கி, மிசா காலம் வரை திமுகவின் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். மேலும், மக்கள் பிரதிநிதியாக இருந்து பல்வேறு பணிகளை மக்களுக்கு ஆற்றியுள்ளார். தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகவும் விளங்கியவர்.அவருடைய மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல, திமுக விற்கும் பேரிழப்பு ஆகும். இவரின் குடும்பத்தாருக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இதேபோல், திமுக தலைமை நிலைய செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், பொங்கலூர் நா.பழனிசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி,மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.