இளம்பிள்ளை, நவ.17- இளம்பிள்ளையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு பணியின் போது தனியார் தொழிற்சாலைக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த மகுடஞ் சாவடி வட்டார பகுதிகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த சுகா தாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காக்காபாளையம் அருகே கண்டர்குலமாணிக்கம் ஊராட்சி பகுதியான காங்கயம்பாளையம் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்றது. அப்போது சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அப்பகுதியிலுள்ள ஷார்பட் எக்யூப்மென்ட் தொழிற்சாலையில் பழைய டயர்கள், பால் கொண்டு செல்லும் டேங்கர் உபகரணம் மூடாமல் இருந்தது. அதில் மழை நீர் தேங்கி கொசு லார்வா புழுக்கள் காணப்பட்டன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சுகாதார கேடு விளை விக்கும் வகையில் இருந்த தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்படி மகுடஞ்சாவடி வட்டாரவளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் அபராதம் விகித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின்போது சுகாதார துணை இயக்குனர் நிர்மல்ஜன், ஊராட்சி உதவி இயக்குனர்கள் கோபிநாத், மணிவாசகம் (தணிக்கை), மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.