கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பாக 30க்கு மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை பேரணியாக தொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் இருந்து கல்வி அலுவலகம் வரைக்கும் நடந்து வந்தனர்.
அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் பணக்கொள்ளையை தடுத்திடவும், புதிய கல்வி கொள்கை திரும்பி பெறவும் மற்றும் நீட் தேர்வில் விலக்கு போன்ற கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முன்னதாகவே போலிசார் குவித்து வைக்கப்பட்டு இருந்தனர், மேலும் பேரணியாக வந்தவர்கள் கையில் வைத்திருந்த கோரிக்கை மனுவை கல்வி அலுவலரிடம் கொடுக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர், ஆனால் போலிசார் அனைவரையும் அனுமதிக்காத காரணத்தினால்
போலிசாருக்கும் மாணவர்களுக்கும் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டு நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின்பு 27 பேரை போலிசார் கைது செய்தனர். கைதின் போது மாணவர்களும் போலிசாரும் தரையில் உருண்டனர்.
போலிசார் கைது நடவடிக்கை எனச்சொல்லி மாணவிகள் கையை பிடித்து இழுப்பது, துப்பட்டாவை பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் குற்றச்சாட்டு வைத்தனர்.