எட்டாண்டுகளாய் கட்டப்பாடாமல் நிற்கும் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை உடனே துவங்க வலியுறுத்தி வெள்ளியன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை சிபிஎம் எம்பி பி.ஆர்.நடராஜன், திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2010 ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச் .எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இப்பாலம் கட்டும்பணிகள் துவங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு எஸ்.ஐ.எச் .எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்குண்டான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகள் கடந்த எட்டு வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது. இப்பாலம் பணிகள் முழுமையடையாத்தால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆளும் அதிமுக அரசு கலைஞரின் திட்டம் என்கிற காழ்ப்புனர்ச்சியின் காரணமாக நீதிமன்றத்தை காரணம்காட்டி இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் அனைத்து கட்சியினரும்,பொதுமக்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாதியில் நிற்கும் மேம்பாலத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கோவைமாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர்பொங்கலூர் நா.பழனிசாமி, காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் , சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன், பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கலையரசன் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தனபால் , வடிவேலு , தந்தை பெரியார் திராவிட கழகம் கு.ராம கிருட்டினன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஊழியர்களும், எஸ்.ஐ.எச் .எஸ். காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர்.
கேட்காத திட்டங்களை திணிக்கும் மத்திய அரசு
பி.ஆர்.நடராஜன் குற்றச்சாட்டு
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், தமிழகம் பாஜகவிற்கு வாக்களிக்காததால் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் கிடைக்காது என பாஜக தமிழக தலைவர்கள் பேசிவருகின்றனர். சிறுபிள்ளைத்தனமாக பேசிவரும் இவர்களை மத்திய பாஜக தலைமை தட்டிவைக்கவேண்டும். அதேநேரத்தில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன், மீத்தேன், நீட்தேர்வு, உயர்மின்கோபுரம், கெயில் பைப்லைன், எட்டுவழிச்சாலை என தமிழக மக்கள் கேட்காத நாசகர திட்டங்களை வலிய திணிக்கிறது. அதேசமயம் தமிழகமக்களுக்கு பயன்படுகிற திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யாமல் பாரபட்சம் பார்க்கிறது. மதவெறி, சாதி வெறியை துடைத்தெரிந்த தமிழக மக்கள் தங்களுக்கு தேவையான உரிமைகளை திட்டங்களை தங்களின் வலுவான போராட்டங்கள் மூலமாக வென்றெடுப்பார்கள். அத்தகைய போராட்டங்களை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்று பட்டு தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உறுதியோடு களம்காண்போம். பாலப்பணிகளை முடிப்பதற்கு அக்கறை காட்டாமல் அரசு இருப்பது ஏற்புடையதல்ல. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க ஐம்பது குடும்பங்களுடன் அதிகாரிகள் அமர்ந்து பேசினால் பிரச்சனை முடிந்துவிடும். அதனைவிடுத்து திமுக ஆட்சியில் கலைஞர் நிதி ஒதுக்கிய திட்டம் என்பதால் அதிமுக அரசு காழ்ப்புணர்ச்சியின்காரணமாக எட்டாண்டுகாலமாக பால வேலையை முடிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. கலைஞர் ஒதுக்கிய திட்டம் என்பதால் கலைஞர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட சாலைகளில் அதிமுகவினர் செல்வதில்லையா, கலைஞர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட குடிநீர் திட்டம் என்பதால் அதிமுகவினர் குடிநீரை பயன்படுத்துவதில்லையா. அனைத்து திட்டங்களும் அரசாங்க திட்டம் என்பதும் மக்களுக்கான திட்டம் என்பதை அதிமுக அரசு உணரவேண்டும். இதேபோல கோவை மாநகரின் திருச்சிசாலை, கவுண்டம்பாளையம்சாலை, அவிநாசி சாலை என அனைத்து பிரதான சாலைகளிலும் தற்போது மேம்பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒட்டுமொத்த நகரத்தையும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாக்கி பொதுமக்களை பெரிதும் அவதிக்குள்ளாக்கி வருகிறன்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையா. அல்லது அமைச்சர் எதைச்செய்தாலும் கேட்பதில்லை என்கிற நிலையை அதிகாரிகள் எடுத்துவிட்டனரா என்கிற சந்தேகம் எழுகிறது. உடனடியாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல இந்த எஸ்ஏஎச்எஸ் பாலத்தின் பணிகளை உடனடியாக துவக்காவிட்டால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி அரசை பணியவைத்து மக்களின் நலனை பாதுகாப்போம் என்றார்.