சேலம், அக்.10- பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கும் நோக்கில் சேலத்தில் 100 பகுதிகளில் அட்டைப் பெட்டிகள் வைத்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகள் சேகரிக்கும் பணி வியாழனன்று நடைபெற்றது. சேலம் மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநக ராட்சி பகுதியில் 100 பகுதிகளில் அட்டைப் பெட்டிகள் வைத்து பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்கள் சேகரிக்கும் துவக்க நிகழ்ச்சி சேலம் குகை பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத் தார். பின்னர் பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறினார். இதையடுத்து அட்டைப் பெட்டிகளில் பிளாஸ்டிக் பைகளை மாணவிகள் போடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவிகள் பள்ளியில் சேகரித்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவு பொருட்களை அட்டைப் பெட்டிகளில் போட்டனர். இதைத்தொடர்ந்து அவர் மாணவிகளிடம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து பேசினார். மேலும் நன்னீரை மூடி வைக்க வேண்டும். கொசு உற்பத்தியாவதை தடுக்க முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.