கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அரசு மருத்துவமனையின் முதல்வர் தகவல்
கோவை, நவ.12 கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்துள்ளார். பருவமழையின் காரணமாக கோவை அரசு மருத்துவ மனைக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பினால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பலர் சிகிச்சைக்காக வருகின்றனர். தற்போது, பெரிய வர்களை விட குழந்தைகள் அதிகளவில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள் ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் இல்லாத நிலையை ஏற்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். இதனால், கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் டெங்கு உயிரிழப்பு குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக கோவை, திருப்பூரை சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக குழந்தைகளை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தற்போது, டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு கோவையை சேர்ந்த 7 பேர், திருப்பூரை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 15 பேரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் 146 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர், நவ. 12- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து திருப்பூர் மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனி யார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ.20 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நான்காவது தளம், அறை எண் 438ல் நடைபெறும் இம்முகாமில் தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளார்கள். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, தையல்பயிற்சி பெற்றவர்கள் என அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் துறையில் வேலை பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இது முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும். வேலை தேடும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலை வாய்ப்பு பதிவு அட்டை மற்றும் தங்கள் சுய விவரக் குறிப்புடன் முகாதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.