மே.பாளையம், மே 18- சிறுத்தைகளின் தொடர் ஊடுருவலால் மலையடிவார கிராமம் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது தோலம்பாளயம் என்னும் கிராமம். வாழை, தென்னை, கரும்பு மற்றும் காய்கறிகள் எனவிவசாயமே பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டது இக்கிராமம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகத் தொடரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தால் இக்கிராமத்தில் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். கிராமத்தை ஒட்டியுள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைக்காட்டில் இருந்துவெளியேறும் சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள ஆடு,மாடு மற்றும் வளர்ப்பு நாய்களைகொன்று உணவாக்கி விடுகிறது.இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட வாழை தோட்டங்களுக்குள் சிறுத்தைகளின் நடமாட்டத்தைப் பார்த்த மக்கள் பீதியடைந்து, தங்களது விவசாய தோட்டங்களுக்குச் செல்வதற்கே அஞ்சுகின்றனர். இது குறித்து வனத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தோலம்பாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூண்டு வைக்கப்பட்டு அதில் ஒரு சிறுத்தையும் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையினை சத்தியமங்கலம் வனப்பகுதியில் கொண்டு சென்றுவனத்துறையினர் விட்டதால் இப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் இதன் பின்னரும் சிறுத்தைகளின் தாக்குதல் சம்பவங்கள் குறையவில்லை. நாய்களின் மாமிசம் பிடித்து விட்ட காரணத்தினால், தோட்டப் பாதுகாப்பிற்கு வளர்க்கப்படும் நாய்கள் மட்டுமின்றி தெரு நாய்களையும், ஆடுகள், கன்றுக்குட்டிகள் என வரிசையாக கொன்று வருவதாக தெரிவிக்கும் ஊர் மக்கள், சிறுத்தைகளின் தொடர் ஊடுருவலால் தங்களது விவசாய பணிகளை தொடர இயலவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் தற்போது வனத்துறை சார்பில் சிறுத்தையினை பிடிக்க கூண்டு வைக்கபட்டு, அதனுள் நாயினையும்கட்டி வைத்துள்ளனர். நாயினைஉணவாக்கி கொள்ள வரும்சிறுத்தை கூண்டுக்குள் சிக்கும்என வனத்துறையினர் காத்திருக்கின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தோலம்பாளையம் கிராமத்தில் சுற்றித்திரியும்சிறுத்தை, தனது குட்டிகளுடன்உலா வருவது இங்கு பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா மூலம்கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாய் சிறுத்தை கூண்டுக்குள் சிக்கும் போது அதன் குட்டிகள்காயமடையக் கூடாது என்பதால், இம்முறை சிறுத்தைகளை பிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றனர்.