tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்க! ஜாக்டோ- ஜியோவினர் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, செப்.6- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் புதுக்கோட்டை பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் மணிக்குமார், மன்ற பொறுப்பாளர் செ.மாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பெ.அழகப்பன், பொருளாளர் தேவகுமார், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொறுப்பாளர் மகாராசன், மாவட்ட துணை செயலாளர் புவியரசு, ஒன்றிய துணை செயலாளர் பால்ராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன், ஒன்றிய பொருளாளர் முருகராஜ், மகளிரணி பொறுப்பாளர் கோமதி, மாவட்ட துணை செயலாளர் அழகு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். செயற்குழு உறுப்பினர் கமல்ஹாசன் நன்றி கூறினார். தேசிய புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வியை அழிக்கின்ற அரசாணை 145 உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு, நிறைவேற்றிட ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள்-பணியாளர்களுக்குமான நல்லுறவை பேண வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.