கோவை, நவ.9- பெட்ரோல் பங்க் வைப் பதற்கு தடையின்மை சான்றுக்கு விண்ணப் பித்தவரிடம் கோவை தீயணைப்புத்துறை அலு வலர் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். கோவை ஆவாரம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி. இவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஆவாரம்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக பல்வேறு இடங்களில் அனுமதி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையில் அனுமதி பெற விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியம், பெட்ரோல் பங்க்கிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாலதண்டாயுதபாணி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலதண்டாயுதபாணியிடம் கொடுத்து அதனை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலரிடம் கொடுக்கச் செய்தனர். இதனையடுத்து ரயில் நிலையம் எதிரே உள்ள தீயணைப்பு துறை அலுவலகம் சென்ற பாலதண்டாயுதபாணி பாலசுப்பிரமணியத்திடம் ரூ.40 ஆயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீயணைப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரிடம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத் துறை அலுவலர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.