அவிநாசி, மே 22-அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, பழங்கரை ஊராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட 255 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. கடந்த ஜனவரி 1ந் தேதி முதல் தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்திரவின்பேரில், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திலட்சுமி தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி ஆகியோர் மேற்பார்வையில் 15 பேர் கொண்ட குழுவினர் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, அவிநாசி முக்கிய சாலை, ஆட்டையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த மற்றும் இருப்பு வைத்திருந்த மொத்த விற்பனையாளர்கள், பேக்கரிகள், தள்ளுவண்டிகள், மளிகை கடைகள் பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்களும் வைத்திருப்பதை தெரிய வந்தது. இதையடுத்து 255 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதிப்பட்டது.