tamilnadu

img

வேளாண்மை திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

கோவை, அக். 19- கோவையில் வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை சனியன்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கோவை மாவட்ட வேளாண்துறை சார்பில் விவ சாயத்தை மேம்படுத்தும் வகையில்  பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலை யில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் செயல் பட்டுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும், குருடம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மக்காச்சோள படைப்புழுவினை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த மருந்து தெளித்ததின் கீழ் மெட்டாரைசியம் தெளிப்பினை துவங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு, மக்காச்சோளம் பயிருக்கு அமைக்கப்பட்ட சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் சோளம் விதை பண்ணை வயல்களை நேரில் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டு, நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டங்களின் கீழ் மழைத்தூவான், சூரிய விளக்குப்பொறி, மண்வள அட்டை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி மற்றும் வேளாண்மை அதிகாரிகள் உடனிருந்தனர்.