சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
நாமக்கல், செப்.28- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்கிட வேண்டுமென சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க (சிஐடியு) பேரவை கூட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியிலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.மோகன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ந. வேலுசாமி சிறப்புரையாற்றினார். விசைத்தறி தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட பொருளாளர் பி.பாலுசாமி, மாவட்ட துணை செய லாளர்கள் எஸ்.முத்துக்குமார், ஏ.அசன், மாவட்ட குழு உறுப்பினர் குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி பாளையம், குமாரபாளையம், வெப்படை, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழில் பணிபுரியும் தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர், நூல் போடுபவர், தார் போடுபவர், பீஸ் பார்ப்பவர், சாயப்பட்டறை தொழி லாளர்கள், கணக்குப்பிள்ளை, மேஸ்திரி உள்ளிட்ட அனைத்துப் பிரிவு ஆண்-பெண் தொழிலாளர்களுக்கும் இந்த ஆண்டு பெற்றுள்ள ஊதியத்தில் 20 சதவிகிதம் தீபாவளி போனசாக. பண்டிகைக்கு பதினைந்து நாள் முன்னதாகவே வழங்க வேண்டும். இது சம்பந்தமாக விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகம் பேசி தீர்வு காண முன் வர வேண்டும். இதற்கான கால நேரத்தை ஒதுக்கி தரவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பள்ளிபாளையம் வட்டாரம் முழுவதும் வாகன பிரசாரத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.