கொரோனாவைரஸ் பற்றிய செய்தி வெளிவரத் துவங்கியவுடன், சீன அரசும் சீன சமூகம் அதன் பரவலுக்கு எதிராக மிகப் பெரிய பிரச்சாரத்தை நடத்திடத் துவங்கின.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் துவங்கி பெய்ஜிங்கின் நார்மல் பல்கலைக்கழகம் வரையிலான உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று மார்ச் 31, 2020 அன்று அறிவியல் துறையில் ஓர் முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டன. “சீனாவில் கோவிட்-19 தொற்று நோய் பரவத் துவங்கிய முதல் 50 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு” என்ற தலைப்பிலான இவ்வறிக்கை, வுஹான் நகரில் ஊரடங்கு நடவடிக்கையைத் துவக்கி, நாடு தழுவிய அளவிலான அவசர நடவடிக்கையை சீன அரசு மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், வுஹான் நகருக்கு வெளியே கூடுதலாக சுமார் 7,44,000 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடுகிறது. “சீனாவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், “உலகம் முழுவதிலுமுள்ள இதர நாடுகளுக்கு செயல்திறன் மிக்க படிப்பினையை அளிப்பதாக” இவ்விஞ்ஞானிகள் எடுத்துரைக்கின்றனர்.
சீனாவிற்கு சென்று வந்த பிறகு பிப்ரவரி மாதத்தில் உலக சுகாதார அமைப்பின் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இதற்கு முன் அறிந்திராத ஓர் வைரஸ் கிருமி வெளிப்பட்ட தருணத்தில், அநேகமாக மிகுந்த அக்கறையோடு, சுறுசுறுப்போடு, போர்க்கால அடிப்படையிலான நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சீனா துவக்கியது” என அக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இந்த வைரஸ் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் சேரிக்கத் துவங்கிய காலகட்டத்தில், இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியோ அல்லது கோவிட்-19 நோய் தொடர்பான சிகிச்சைக்காக குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லாதவொரு தருணத்தில், இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, சீன அரசின் பல்வேறு மட்டங்களிலும், சமூக அமைப்புகளாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உணர்ச்சிகரமானவை; அறிவுப்பூர்வமானவை.
நோய் தடுப்பு நடவடிக்கையின் துவக்கம்
ஜனவரி 2020ன் துவக்க நாட்களில், “எந்த வைரஸ் கிருமியால் ஏற்படுத்தப்படுகிறது என்று தெரியாதா நிமோனியா” என அப்போது கருதப்பட்ட நோயைக் கண்டறிவது, அதற்கான சிகிச்சை மற்றும் ஆய்வுக்கூட பரிசோதனை ஆகியவை தொடர்பான நடைமுறைகளை தேசிய சுகாதார அமைப்பும், சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமும் ஏற்படுத்தத் துவங்கின. சிகிச்சைக்கான கையேடு ஒன்று தேசிய சுகாதார அமைப்பு மற்றும் ஹூபே மாகாணத்தின் சுகாதாரத்துறையால் தயாரிக்கப்பட்டு, ஜனவரி 4ம் தேதியன்று வுஹான் நகரத்திலுள்ள அனைத்து மருத்துவ அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டன. அன்றைய தினமே நகரம் முழுமைக்குமான பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது. ஜனவரி 7ம் தேதியன்று, முதன்முறையாக புதிய கொரோனாவைரஸ் கிருமியின் இனத்தை சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வேறுபடுத்தி அடையாளம் கண்டது. அதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், சீன விஞ்ஞான கழகத்தின் வுஹான் நகர தொற்றுநோய் ஆய்வு நிறுவனமும் மற்றவர்களும் இத்தொற்று நோய்க்கான பரிசோதனைக் கருவிகளை கண்டுபிடித்தனர்.
ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில், இந்த வைரஸ் கிருமியின் தன்மை பற்றி கூடுதல் விவரங்கள் தெரிய வந்தன. அதன் பின்னர், அதனை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் வடிவம் பெறத் துவங்கியது. ஜனவரி 13ம் தேதியன்று, துறைமுகங்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யுமாறும், பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதை குறைத்திடுமாறும் வுஹான் நகர அதிகாரிகளை தேசிய சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. அதற்கு மறுநாள், தேசிய அளவிலான காணொலி மாநாட்டை தேசிய சுகாதார மையம் நடத்தியது. அம்மாநாட்டில், பெருமளவு தொற்றும் தன்மை கொண்ட புதுமையான வைரஸ் வகை குறித்து சீனாவில் உள்ள அனைவரையும் எச்சரித்து, தேசிய சுகாதார அவசர நிலைக்கு தயாராகும்படி கேட்டுக் கொண்டது.
ஜனவரி 17ம் தேதியன்று, பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இந்த வைரஸ் குறித்த பயிற்சியை அளித்திட 7 கண்காணிப்பு குழுக்களை தேசிய சுகாதார மையம் சீனாவின் மாகாணங்களுக்கு அனுப்பியது. மேலும், ஜனவரி 19ம் தேதியன்று பரிசோதனை கருவிகளுக்காக நியூக்ளிக் அமில எதிர்வினைப் பொருட்களை சீனாவின் பல சுகாதாரத் துறைகளுக்கு தேசிய சுகாதார மையம் விநியோகித்தது. ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், பரிசோதனைகளை மேற்கொள்ள சீன மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஜோங் நன்ஷான் தலைமையிலான உயர்மட்டக் குழு உஹான் நகர்த்திற்குச் சென்றது.
பாரம்பரிய மருத்துவமுறை
அதற்கடுத்த ஒரு சில நாட்களில், இந்த வைரஸ் மனிதர்களிடையே எவ்வாறு பரவுகிறது, அதை எவ்வாறு தடுத்து நிறுத்திடலாம் என்பன குறித்து தேசிய சுகாதார மையம் புரிந்து கொள்ளத் துவங்கியது. ஜனவரி 15 முதல் மார்ச் 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில், தேசிய சுகாதார மையம் தனது வழிகாட்டுதல்களின் ஏழு பதிப்புகளை வெளியிட்டது. இவ்வழிகாட்டுதல்களைப் பார்க்கும்போது, இந்த வைரஸ் குறித்த விவரங்களைக் கண்டறிவதிலும், அதன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அதன் திட்டங்களை வடிவமைப்பதிலும் அது பெற்ற வளர்ச்சியைத் தெளிவாக காண முடிகிறது. ஒருங்கிணைந்த சீன மற்றும் ஆங்கில மருத்துவமுறை உள்ளிட்ட சிகிச்சைக்கான புதிய வழிமுறைகளும் இதில் அடங்கும். இந்த வைரஸ் கிருமியின் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு பாரம்பரிய மருந்து அளிக்கப்பட்டு, அவர்களில் 90 சதவீதத்தினருக்கு அதனால் நல்ல பயனேற்பட்டதாக பாரம்பரிய சீன மருத்துவமுறையின் தேசிய நிர்வாகம் இறுதியில் தெரிவிக்கிறது.
வுஹான் நகரத்திற்கு உள்ளே புதிய ஆட்களை அனுமதிப்பதும், அங்கிருந்து ஆட்கள் வெளியேறுவதும் தடுக்கப்பட வேண்டும் என்பது ஜனவரி 22ம் தேதி தெளிவாகிறது. அன்றைய தினம், வுஹான் நகரத்திற்குச் செல்ல வேண்டாம் என மக்களை மாநில சட்டமன்ற தகவல் அலுவலகம் வற்புறுத்தியது. அதற்கடுத்த நாள், அந்நகரம் தவிர்க்கவியலாதவாறு இழுத்து மூடப்பட்டது. வைரஸ் கிருமியின் கொடூரமான உண்மைகள் அப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தது.
அரசின் செயல்பாடுகள்
ஜனவரி 25ம் தேதியன்று, கோவிட்-19 நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக, லீ கேகியாங் மற்றும் வாங் ஹனிங் ஆகிய இரு தலைவர்களின் பொறுப்பின் கீழ் ஓர் மத்திய குழுவை சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தது. வைரஸ் கிருமியை கட்டுப்படுத்திடுவதற்கான தங்களது கொள்கைகளை வடிவமைக்கும்போது சிறந்த அறிவியல்பூர்வமான சிந்தனைகளை உபயோகப்படுத்திடுமாறும், பொருளாதாரக் கருத்துகளுக்கு முன் மக்களின் ஆரோக்கியத்தை முன்வைக்க ஒவ்வொரு வளத்தையும் பயன்படுத்திடுமாறும் அக்குழுவை சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் பணித்தார். ஜனவரி 27ம் தேதியன்று, வைரஸ் கிருமியை துரிதகதியில் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிமுறையை வடிவமைக்க மாநில கவுன்சிலின் துணைப் பிரதமரான சன் சுன்லான் வுஹான் நகரத்திற்கு மத்திய வழிகாட்டும் குழுவை தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். இக்காலகட்டத்தில், இந்த வைரஸ் கிருமியை கையாள்வதற்கான நிகழ்ச்சி நிரலை அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் வளர்த்தெடுத்தன. அவற்றைக் கீழ்க்காணும் நான்கு அம்சங்களாகத் தொகுத்திடலாம்.
1. வைரஸ் கிருமி மக்களிடையே ஊடுருவி பரவுவதைத் தடுத்திட மாகாணத்தில் வெளியாட்கள் உள்ளே செல்ல இயலாதவாறு கதவடைப்பு செய்வதோடு, மாகாணத்திற்குள்ளேயும் போக்குவரத்தை குறைந்தபட்ச அளவிற்குக் கொண்டு வருதல். ஏற்கனவே சீனாவில் துவங்கியிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தால் இது சிக்கலானது. இத்தருணத்தில் குடும்பங்கள் மற்றவர்களின் வீடுகளுக்கும், சந்தைகளுக்கும் செல்வர். (இக்காலகட்டத்தில்தான் மிகக் குறைவான நாட்களில் மிகப் பெரிய அளவில் மக்கள் இடம் பெயர்ந்து செல்வது நடைபெறும். சுமார் 1. 4 பில்லியன் சீன மக்கள் தங்களது குடும்ப உறவுகளின் நட்புகளின் வீடுகளில் திரள்வார்கள்). இவை அனைத்தையும் தடுக்க வேண்டியிருந்தது. நோய் தொற்று பரவுவதற்கான வழிமுறைகளையும், எங்கிருந்து தொற்று ஏற்படுகிறது, எவ்வகையில் பரவுகிறது என்பதை கண்டறிந்து ஆய்வு செய்திட மிகவும் முன்னேறிய தொற்றுநோய் குறித்த சிந்தனைகளை உள்ளூர் அதிகாரிகள் பயன்படுத்தத் துவங்கியிருந்தனர். வைரஸ் கிருமி பரவுவதை தடுத்து நிறுத்திட இது அவசியமானதாக இருந்தது.
2. பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோயாளிகளுக்கான மருத்துவமனை படுக்கைகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளர்களுக்குத் தேவையானவற்றை தயாராக வைத்திருத்தல். தற்காலிகமான சிகிச்சை மையங்களை நிர்மாணிப்பதும் இதில் அடங்கியிருந்தது. பின்னர் இரண்டு முழுமையான மருத்துவமனைகள் (ஹுவோஷென்ஷான் மருத்துவமனை மற்றும் லெய்ஷென்ஷான் மருத்துவமனை) இதில் அடங்கும். அதிகமான எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கண்டறிய கூடுதல் எண்ணிக்கையில் தேவைப்பட்ட பரிசோனைக் கருவிகள் கண்டறியப்பட்டு, உற்பத்தி செய்யப்பட வேண்டியிருந்தது.
3. மாகாணத்தில் கதவடைப்பு செயல்படுத்தப்பட்ட காலத்தில், அங்கு வசித்து வரும் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைப்பதை உத்திரவாதம் செய்வது.
4. வதந்திகளின் அடிப்படையில் இல்லாது, அறிவியல்பூர்வமான உண்மைகளின் அடிப்படையிலான தகவல்கள் மக்களை சென்றடைவதை உத்திரவாதம் செய்வது. இத்தொற்றுநோயால் துவக்கத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த தகவல்கள் கிடைத்தது முதல் ஜனவரி மாத இறுதிவரை உள்ளூர் அதிகாரிகள் மேற்கொண்ட அனைத்து பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் இக்குழு விசாரணையை மேற்கொண்டது.
இந்த நான்கு அம்சங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சீன அரசும், உள்ளூர் அதிகாரிகளும் மேற்கொண்ட அணுகுமுறையை வரையறுத்தது. இந்த வைரஸ் கிருமி பரவுவதன் சங்கிலித் தொடரை துண்டித்து இதனை எதிர்த்துப் போராடுவதை ஒருங்கிணைத்திடத் தேவையான பரவலான அதிகாரத்துடன் தேசிய சுகாதார அமைப்பின் தலைமையில் ஓர் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறை நிறுவப்பட்டது. ஏப்ரல் மாதத்தின் துவக்கம் வரையிலான 76 நாட்களுக்கு வுஹான் நகரமும், ஹூபே மாகாணமும் ஏறத்தாழ முழுமையான கதவடைப்பின் கீழ் இருந்தது. பிப்ரவரி 23ம் தேதியன்று, சீனாவின் ஒவ்வொரு பகுதியையும் சார்ந்த 1,70,000 மாவட்ட மற்றும் பகுதி கம்யூனிஸ்ட் கட்சி செயல்வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளிடம் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உரையாற்றினார். “இது ஓர் நெருக்கடி என்பதோடு ஒரு மாபெரும் சோதனையுமாகும்” என அவர் குறிப்பிட்டார். இத்தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதிலும், மக்களின் நலனை முன்னிறுத்துவதிலேயே சீனாவின் அனைத்து அழுத்தமும் இருக்கும். அதே நேரத்தில், தனது நீண்ட கால பொருளாதார நிகழ்ச்சி நிரலும் பாதிக்கப்படாமல் இருப்பதை சீனா உறுதி செய்திடும் என்று கூறினார்.
அருகாமைக் குழுக்கள்
வைரஸ் கிருமிக்கு எதிரான நடவடிக்கையில் சீன சமூகத்தை வரையறுக்கும் பொதுமக்களின் செயல்பாடு ஒரு முக்கியமான பகுதியாக இருந்தது. இது முழுமையாக வெளிவரவில்லை. 1950களில், அருகருகே வசிக்கும் மக்கள் பரஸ்பரம் தங்களது பாதுகாப்பிற்காகவும், உதவிக்காகவும் நகர்ப்புற சிவில் அமைப்புகளை அமைத்தனர். வுஹானில், கதவடைப்பு நிலை முழுமையாக செயல்படுத்தப்பட்டபோது, இத்தகைய அருகாமைக் குழுக்கள், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பது, உணவுப் பொருட்களை அளிப்பது (குறிப்பாக முதியோர்களுக்கு) மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க வீடு வீடாகச் சென்றனர். சீனாவின் இதர பகுதிகளில், அங்கிருந்து வெளியே செல்பவர்கள் மற்றும் வெளியிலிருந்து அப்பகுதிக்குள் நுழைபவர்களைக் கண்காணித்திட அப்பகுதியின் நுழைவாயிலில் உடல்வெப்பத்தை பரிசோதிக்கும் சாவடிகளை இத்தகைய அருகாமைக் குழுக்கள் அமைத்தன. இவ்வாறாக அடிப்படை பொதுசுகாதாரப் பொறுப்புகள் பிரித்துக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டன. மார்ச் 9ம் தேதியன்று, இத்தகைய குழுக்களில் பணியாற்றியவர்களில் 53 பேர் உயிரிழந்தனர். அதில் 49 பேர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆவர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம்
சீனாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள 6,50,000 மக்கள் சமூகக் குழுக்களிடையே முன்வரிசையில் நின்றுசெயல்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 90 மில்லியன் (9 கோடி) உறுப்பினர்களும், 4. 6 மில்லியன் (46 லட்சம்) ஸ்தலமட்ட கட்சி அமைப்புகளும் நாடு முழுவதிலும் சமூக நடவடிக்கைகளை வடிவமைத்திட உதவின. முன்வரிசையில் நின்று செயல்படும் மருத்துவக் குழுவின் ஒரு பகுதியாக இருந்திட கட்சி உறுப்பினர்களாக உள்ள சுகாதாரப் பணியாளர்கள் வுஹான் நகரத்திற்குச் சென்றனர். இதர கட்சி உறுப்பினர்கள் அருகாமைக் குழுக்களில் இடம்பெற்று செயல்பட்டனர் அல்லது வைரஸ் கிருமிக்கு எதிராகச் செயல்படுவதற்காகப் புதிய மேடைகளை உருவாக்கினர்.
பொறுப்புகளின் பரவலாக்கல் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை வரையறுத்தன. ஹுனான் மகாணத்தில் சாங்ஷாவில் யுஹுவா மாவட்டத்தின் டியாமா நகரத்தின் டியான்க்சின்கியோ கிராமத்தில், அக்கிராம மக்கள் புத்தாண்டை ஒட்டி ஒருவர் மற்றவரின் வீடுகளுக்குச் செல்ல வேண்டாம், ஒன்றாகச் சேர்ந்து உணவருந்த வேண்டாம் என வலியுறுத்திட 26 ஒலிபெருக்கிகளின் “உரத்த குரலை” யாங் ஜிகியாங் என்ற கிராம அறிவிப்பாளர் பயன்படுத்தினார். குவாங்ஜி ஜுவாங் தன்னாட்சி மண்டலத்தின் நானிங் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீற வேண்டாம் என்பதை நினைவூட்டிட ஊதுகொம்பின் ஒலியை எழுப்பிட டிரோன்களைக் காவல்துறையினர் பயன்படுத்தினர்.
சிசுவான் மாகாணத்தின் செங்குடு பகுதியில், வைரஸ் கிருமி பரவுவதைத் தடுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அப்பகுதியின் 4,40,000மக்கள் ஒன்றுசேர்ந்து குழுக்களை அமைத்தனர். சுகாதாரக் கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களை மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்தனர். உடல் வெப்பத்தைப் பரிசோதித்தனர். உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்தனர். பீதியடைந்திருந்த மக்களை மகிழ்விப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்தனர். வணிகத்தில், சமூகக் குழுக்களில் கூட்டாக ஈடுபடுவதோடு, ஸ்தலமட்ட சுயநிர்வாக அமைப்புகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது ஆகியவற்றில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர்கள் மற்றவர்களுக்கு முன்னோடிகளாக இருந்து செயல்பட்டனர். வைரஸ் குறித்த எச்சரிக்கைகளை பதிவு செய்த பயனாளர்களுக்கு அனுப்புவதோடு, நகரத்தில் வைரஸ் கிருமி நகரத்தில் எங்கெல்லாம் பரவுகிறது என்பதைக் கண்டறியப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான தரவுகளை உருவாக்கிடும் அலைபேசி ‘ஆப்’ ஒன்றை பீஜிங்கில் வசித்து வருவோர் உருவாக்கினர்.
மருத்துவத் தலையீடுகள்
இந்நோய் தொற்று ஏற்படத் துவங்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே உஹான் நகரத்துக்குள் சென்ற மருத்துவர்களில் லீ லஞ்சுவான் ஒருவர் ஆவார். அங்கு அவர் சென்றபோது மருத்துவ பரிசோதனையை “மேற்கொள்வது மிகச் சிரமமானதாக இருந்தது” என்றும், உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கான நிலை “மிக மோசமானதாக இருந்தது” எனவும் அவர் நினைவு கூர்கிறார். ஒரு சில நாட்களுக்குள், 40,000க்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள் அந்நகரத்தை வந்தடைந்தனர். தற்காலிக சிகிச்சை மையங்களில் நோய் தொடர்பான லேசான அறிகுறிகளுடன் வந்த நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்ட செல்லப்பட்டனர். பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், சுவாசக் கருவிகள் மற்றும் இதரவை அங்கு பாய்ச்சல் வேகத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். “இறப்பு விகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டது” என டாக்டர் லீ லஞ்சுவான் குறிப்பிடுகிறார். “வெறும் இரண்டு மாத காலத்தில், வுஹானில் நோய் தொற்று நிலை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தது” என்கிறார்.
அந்நகரத்தின் மக்களிடையே ஆய்வுகளை மேற்கொள்ள சீனா முழுவதிலிமிருந்து 1,800 குழுக்கள் – ஒவ்வொரு குழுவிலும் 5 உறுப்பினர்கள் இருந்தனர் – வந்து சேர்ந்தனர். “சிரமமான மற்றும் ஆபத்தான” தொற்றுநோய் குறித்த ஆய்வுகளை வீடு வீடாகச் சென்று தங்களது குழு மேற்கொண்டதாக ஜிலின் மாகாணத்திலிருந்து வந்த குழுக்களில் ஒன்றின் தலைவரான வாங் போ குறிப்பிடுகிறார். அந்நகரை வந்தடைந்த ஒரு சில வாரங்களுக்குள் தங்களது குழு 374 பேரை சந்தித்து நோய்த்தொற்று குறித்த ஆய்வை மேற்கொண்டதோடு, அவர்கள் மூலம் நோய் பரவி பாதிக்கப்பட்டிருந்த 1,383 பேரை கண்டுபிடித்து, கண்காணிக்கும் பணியை மேற்கொண்டதாக ஜிலினிலிருந்து வந்த குழுக்களில் உறுப்பினராக இடம் பெற்றிருந்த யோ லாய்ஷுன் குறிப்பிடுகிறார். நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதோடு, நோய்க்கான அறிகுறி இன்னமும் காணப்படாமல் அல்லது பரிசோதனையில் பாதிப்பு ஏற்படவில்லை என கண்டறியப்பட்டவர்களையும் தனிமைப்படுத்திட இப்பணி மிக முக்கியமானதாக இருந்தது. பிப்ரவரி 9ம் தேதி வரை, வுஹானில் வசித்து வந்த 4. 2 மில்லியன் குடும்பங்களை (10. 59 மில்லியன் மக்களை) சுகாதார அதிகாரிகள் பரிசோதித்தனர். அதாவது அங்குள்ள மக்கள் தொகையில் 99 சதவீதத்தினரை அவர்கள் பரிசோதித்தனர். இது ஓர் பிரம்மாண்டமான பணியாகும்.
திகைப்படையச் செய்த வேகம்
மருத்துவ உபகரணங்கள், குறிப்பாக மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு
மருத்துவ உபகரணங்கள், குறிப்பாக மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கருவிகளின் உற்பத்தியில் காணப்பட்ட வேகம் திகைப்படையச் செய்வதாக இருந்தது. ஜனவரி 28ம் தேதியன்று, 10,000 ஜோடிகளுக்கும் சற்று குறைவான எண்ணிக்கையிலேயே தனிநபர் பாதுகாப்பு கருவிகளையே நாளொன்றுக்கு சீனா உற்பத்தி செய்து வந்தது. பிப்ரவரி 24ம் தேதிக்குள் இவர்களது உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 2,00,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. பிப்ரவரி 1ம் தேதியன்று, நாளொன்றுக்கு 7,73,000 பரிசோதனைக் கருவிகளை சீன அரசு உற்பத்தி செய்தது. பிப்ரவரி 25ம் தேதிக்குள் நாளொன்றுக்கு 17 லட்சம் பரிசோதனைக் கருவிகளை அரசு உற்பத்தி செய்தது. மார்ச் 31ம் தேதிக்குள் நாளொன்றுக்கு 42.6 லட்சம் மில்லியன் பரிசோதனைக் கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டன. பாதுகாப்புக் கவசங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுவாசக் கருவிகள், மின்னணு இருதயத்துடிப்பு கண்காணிப்பு மானிகள், சுவாசத்தில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதற்கான சிகிச்சை முறைக்கான இயந்திரங்கள், இரத்த வாயுவை கூறுபடுத்தும் கருவிகள், காற்றில் உள்ள மாசுக்களை அகற்றும் இயந்திரங்கள் மற்றும் ஹீமோடயாலிசஸ் இயந்திரங்கள் போன்றவற்றை பெருமளவுக்கு உற்பத்தி செய்திட தொழிற்சாலைகளுக்கு அரசு அளித்த உத்தரவுகள் வழிவகுத்தன. எந்தவொரு மருத்துவ உபகரணம் கிடைப்பதிலும் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்பதை உத்திரவாதம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியது.
2003ம் ஆண்டில் சார்ஸ் நோய் தொற்று ஏற்பட்டபோது பணியாற்றியவரும், உலகின் முதலாவது எபோலா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக 2015ம் ஆண்டில் சியர்ரா லியோனுக்கு சென்றவருமான சீனாவின் புகழ்பெற்ற தொற்றுநோய் ஆய்வியல் நிபுணர்களில் ஒருவரான சென் வெய், தனது குழுவினரோடு வுஹான் நகரை வந்தடைந்தார். ஜனவரி 30ம் தேதிக்குள் எளிதில் எடுத்துச் செல்லத் தக்க பரிசோதனைக் கூடத்தை அவர்கள் ஏற்படுத்தினர். மார்ச் 16ம் தேதிக்குள் அவரது குழு புதிய கொரோனாவைரஸ் கிருமிக்கு எதிரான முதலாவது தடுப்பூசியை உற்பத்தி செய்து, சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முயற்சிகளின் ஒரு பகுதியாக அனுப்பி வைக்கப்பட்ட தடுப்பூசிகளில் சென்னின் கண்டுபிடிப்பு முதலாவதாகும்.
நிவாரணங்கள்
60 மில்லியன் (6 கோடி) மக்கள் வசித்து வருகின்ற ஒரு மாகாணத்தை இரண்டு மாதங்களுக்கும் கூடுதலான காலத்திற்கு கதவடைப்பு செய்து வைத்திருப்பதும், 1. 4 பில்லியன் (140 கோடி) மக்கள் வசிக்கும் ஒரு நாட்டின் பெரும்பகுதியை மூடி வைப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இதன் காரணமாக ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் எப்போதும் மிகப் பெரிதாகவே இருக்கப் போகின்றன. ஆனால், நாட்டில் ஏற்படும் பொருளாதார தாக்கங்களை மட்டும் மனதில் கொண்டு நோய்க்கெதிரான நடவடிக்கைகள் வகுக்கப்படாது என சீன அரசு தனது ஆரம்பகால உத்தரவுகளிலே குறிப்பிட்டது. எந்தவொரு கொள்கையையும் வகுப்பதில் மக்கள் நலனே பிரதானமாக இருக்கும் எனக் குறிப்பிட்டது.
ஜனவரி 22ம் தேதியன்று, வழிநடத்தும் குழு அமைக்கப்படுவதற்கு முன்னதாக, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சையை உத்திரவாதம் செய்ததோடு, சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் என அரசு வெளியிட்ட சுற்றறிக்கை குறிப்பிட்டது. அதன் பின்னர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளித்திடத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான செலவினத் தொகை இந்த காப்பீட்டு நிதியிலிருந்து முழுமையாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக, எந்தவொரு நோயாளியும் சிகிச்சைக்கென பணம் எதையும் செலுத்த வேண்டியிருக்காது.
கதவடைப்பு செயல்படுத்தப்பட்ட நாட்களில், உணவு மற்றும் எரிபொருட்கள் வழக்கமான விலைகளில் எந்தவிதத் தட்டுப்பாடுமின்றி கிடைப்பதை உத்திரவாதம் செய்வதற்கான நடைமுறையை அரசு ஏற்படுத்தியது. சீன எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்கள் கழகம், சீன தானிய இருப்புக் குழு மற்றும் சீன தேசிய உப்பு தொழிற்சாலை குழுமம் போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், அரிசி, மாவு, எண்ணெய், மாமிசம் மற்றும் உப்பு ஆகியவற்றை அதிக அளவில் அளித்தன. விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களோடு நேரடித் தொடர்பை நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்ள இருப்பு மற்றும் வர்த்தக கூட்டுறவுகளின் அனைத்து சீனக் கூட்டமைப்பு உதவியது. சீன விவசாயத் தொழில் வர்த்தகக் கழகம் போன்ற அமைப்புகள் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், பொருட்களின் விலை அதிகரிக்காது சீராக இருப்பதையும் வழிவகை செய்திட உறுதி பூண்டன.
விலையேற்றம் மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளை முறியடித்திட மக்கள் நலத்துறை அமைச்சகத்தின் கூட்டம் பிப்ரவரி 3ம் தேதியன்று நடைபெற்றது. ஏப்ரல் 8ம் தேதி வரை, 3. 158 நோய்த்தொற்று தொடர்பான கிரிமினல் குற்றங்களை சீனாவின் குற்றவியல் அமைப்புகள் விசாரித்தன.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி உதவியை அரசு அளித்தது. இதனையடுத்து, பாதுகாப்பான பணிச் சூழலை உத்திரவாதம் செய்யக் கூடிய வகையில் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மாற்றியமைத்தனர். உதாரணமாக, உணவுக்கான இடைவேளை ஒரே நேரத்தில் இல்லாது இடைவெளி விட்டு இருக்குமாறு மாற்றுவது, தொழிலாளிகளின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பது, உரிய கால இடைவெளியில் வேலை செய்யும் இடத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது, அறையினுள் காற்றை தாராளமாக வரவும் வெளியே செல்லவும் செய்யும் கருவிகள் தங்குதடையின்றி செயல்படுவதை உத்திரவாதம் செய்வது, முகக் கவசங்கள், கண்ணாடிகள், கைகளுக்கான லோஷன்கள் மற்றும் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்கள் போன்றவற்றை தனது தொழிலாளர்களுக்கு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை குவாங்ஜு லிங்னான் கேபிள் நிறுவனம் மேற்கொண்டது.
தொடரும் கவனம்
ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் வுஹான் நகரத்தில் செயல்படுத்தப்பட்ட கதவடைப்பு காரணமாக இந்நோய் தொற்று ஹூபே மாகாணத்தைத் தாண்டி வெளியே பரவுவது தடுக்கப்பட்டது என லான்செட் இதழில் ஹாங்காங் நாட்டைச் சார்ந்த நான்கு தொற்றுநோய் நிபுணர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை காட்டுகிறது. கதவடைப்பு செயல்படுத்தப்பட்ட இரண்டு வார காலத்திற்குள் பெய்ஜிங், ஷாங்காய், ஷென்ஜென் மற்றும் வென்ஜு போன்றவற்றின் பிரதான நகரங்களில் இத்தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதைக் காண முடிந்தது. எனினும், கோவிட்-19 நோயின் பெருமளவிலான தொற்றின் காரணமாகவும், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதிருப்பதாலும், இந்த வைரஸ் கிருமியின் தாக்கம் இரண்டாவது முறை ஏற்படும் என இவர்கள் எழுதினர். இது சீன அரசுக்கு மிகுந்த கவலையை அளித்து வருகிறது. எனவே, இந்த புதிய கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் சீன அரசு செயல்பட்டு வருகிறது.
இருந்தபோதும், கதவடைப்பு நடவடிக்கை நீக்கப்பட்டவுடன் வுஹான் நகரம் முழுமையிலும் கொண்டாட்டங்கள் அரங்கேறின. மருத்துவப் பணியாளர்களும், தன்னார்வலர்களும் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டனர். தனது சோசலிச கலாச்சாரத்தையும், அமைப்புகளையும் பெருமளவிற்கு பயன்படுத்திக் கொண்டு நோய் பரவல் சங்கிலித் தொடரின் கண்ணியை விரைவாக முறிப்பது சீனாவிற்கு சாத்தியமானது.