திருவனந்தபுரம், ஏப்.17- பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் தனி விமானத்தில் கொச்சியிலிருந்தும் திருவனந்தபுரத்திலிருந்தும் 268 பேர் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றனர். இவர்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த ஏழு பேர் உள்ளனர். அவர்கள் கேரளத்திற்கு தனியாக நன்றி தெரிவித்தனர். இது கொரோனா எதிர்ப்பில் கிடைத்துள்ள வெற்றியின் வெளிப்பாடு என கேரள முதல்வர் தெரிவித்தார் .
வியாழனன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: கேரளத்தில் வியாழனன்று கண்ணூர் மாவட்டத்தில் 4, கோழிக்கோடு 2 காசர்கோடு 1 என மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இருவர் பிறர் மூலம் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள். 27 பேர் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர்.
இதுவரை 394 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. அதில் 147 மட்டும் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். 88855 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் வீடுகளில் 88332 பேரும், மருத்துவமனைகளில் 532 பேரும் உள்ளனர். வியாழனன்று மட்டும் 108 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 17,400 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 16,459 முடிவுகள் நோய் தொற்று இல்லை என வந்துள்ளன. அதே நேரத்தில் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவது ஆறுதலளிப்பதாகும். காசர்கோடு மாவட்டத்திலிருந்து மட்டும் வியாழனன்று (ஏப்.16) கோவிட்டிலிருந்து விடுபட்டவர்களது எண்ணிக்கை 24 ஆகும். இது நோய் உறுதி செய்யப்பட்டதைவிட மூன்று மடங்கிலும் அதிகமாகும்.
இதனிடையே கேரள த்தில் திங்கள் (ஏப்.20) முதல் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள அமைச்சரவை விரிவாக விவாதித்தது. இதில் மத்திய அரசு அறிவி த்துள்ள பொதுவான கட்டுப்பாடுகளை கேரளம் ஏற்று அமல்படுத்தும். தீவிரம் அல்லாத மாவட்டங்களில் ஏப்ரல் 20 முதல் மத்திய அரசு சில விலக்குகளை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகளாக விமானம், ரயில் போக்குவரத்து, மெட்ரோ, பொது போக்குவரத்து போன்றவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு வெளியே செல்ல கட்டுப்பாடுகள் உள்ளன, அவை தொடரும்.
தொற்று அடிப்படையில் பகுதிகள் பிரிப்பு
மத்திய அரசு அறிவித்துள்ள பட்டியலில் காசர்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், மலப்புறம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்கள் ஹா ட்ஸ்பாட்டுகளாக உள்ளன. கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் காசர்கோடு- 61, கண்ணூர்- 45, மலப்புறம்- 9 என உள்ளது. இந்த மூன்று மாவட்டங்கள் அல்லாமல் நோய் பாதித்த 9 பேருடன் கோழிக்கோடு நான்காவதாக உள்ளது. இவை நான்கையும் சேர்த்து ஒரு பகுதியாக்குவது என்கிற எண்ணம் கேரள அரசிடம் உள்ளது. இது மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதலுடன் அது அமலாக்கப்படும். இந்த நான்கு மாவட்டங்களிலும் ஊரடங்கில் விலக்கு இல்லாமல் தொடரும் நிலையே உள்ளது. இந்த பகுதிகளில் நோய் தீவிரம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த கிராம ங்களின் எல்லைகள் மூட ப்படும்.
நோய் தொற்று ஆறு நபர்களிடம் உள்ள பத்தனம்திட்டா, தலா மூன்று நபர்கள் உள்ள எர்ணாகுளமும் ஹாட்ஸ்பாட் மாவட்ட ங்களாகும். இவற்றில் நோய் தொற்று குறைவாக உள்ளதால் முதல் பகுதியிலிருந்து இவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இந்த பகுதிகளில் ஏப்ரல் 24 வரை கட்டுபாடுகள் தொடரும். அதன்பிறகு நிலைமைக்கு ஏற்ப சில விலக்குகள் அனுமதிக்கப்படும்.
மூன்றாவது பகுதியாக முடிவு செய்திருப்பது ஆலப்புழா, திருவன ந்தபுரம், பாலக்காடு, திரிச்சூர் மாவட்டங்களாகும். திருவனந்தபுரம் ஹாட்ஸ்பாட்டாகும். ஆனால் இங்கு நோய் தொற்று இரண்டு மட்டுமே உள்ளது. இந்த பகுதிகளில் பகுதி அளவில் இயல்பு வாழ்க்கை அனுமதிக்கப்படும். திரையரங்குகள், வழிபாட்டுத்தலங்களில் தடை தொடரும். மக்கள் கூடுவது முழுமையாக தடை செய்யப்படும். அதே நேரத்தில் முடி திருத்தகம், ஓட்டல்கள், போன்றவை மாலை ஏழு மணி வரை அனுமதிக்கப்படும். கோட்டயம், இடுக்கியில் நோய் தொற்று இல்லை. இவை மற்றொரு பகுதியாக கருதப்படும். இடுக்கியின் எல்லைகள் முற்றாக மூடப்படும். மாவட்டங்களுக்கு இடையிலான பயணம் முற்றாக தடைசெய்யப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிபெற ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவில் கட்டுப்பாடுகள் அமலாக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.