tamilnadu

img

எல்டிஎப்புக்கு சாதகமாகும் தேர்தல் களம்

கேரள சட்டமன்ற 5 இடைத்தேர்தல்கள்

திருவனந்தபுரம், அக்.13- கேரளத்தில் மக்களவைத் தேர்தலின்போது மத்திய பாஜக அரசை அகற்றும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளதாக கூறி வாக்காளர்களை ஈர்க்க முயன்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டது கேரள வாக்காளர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அது 19 தொகுதிகளின் தேர்தல் வெற்றியை காங்கிரசுக்கு அளித்தது. ஆனால் காங்கிரசின் தேர்தல் உத்தி பாஜகவுக்கே சாதகமானது.

வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பெரும் தோல்வி கேரள மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதோடு எல்டிஎப் அரசின் செயல்பாடுகள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்று இடதுசாரிகள்தான் என்பதை கேரள வாக்காளர்கள் உறுதியாக நம்புகின்றனர். கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில் 54 ஆண்டுகளாக யுடிஎப் கோட்டை என்கிற பிரமையை பாலா  சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் உடைத்தனர். யுடிஎப் ஆட்சியில் நடந்த ஊழல்கள் இப்போது பெரும் அச்சுறுத்தலாக அந்த கூட்டணிக்கு மாறியுள்ளன.

பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சபரிமலை பிரச்சனையை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் உள்ளது. பாலா தொகுதியில் பாஜக வேட்பாளர் என்.ஹரி யுடிஎப்புக்கு ஓட்டுகளை விற்றதாக பாஜகவின் பாலா தொகுதி தலைவர் குற்றம் சாட்டினார். தேர்தல்வரை காத்திருந்து அவரை பாஜகவிலிருந்து நீக்கினர். ஆனால் அவர் எழுப்பிய குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை தேர்தல் முடிவு அம்பலப்படுத்தியது. 2016 சட்டமன்ற தேர்தலில் 24,000 ஓட்டுகளைப் பெற்ற ஹரி 18,044 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். சுமார் 6,000 ஓட்டுகள் குறைந்தன. இந்நிலையில் கேரளத்தில் காலியாக இருந்த வட்டியூர்காவு, கோந்நி, அரூர், எர்ணாகுளம், மஞ்சேஸ்வரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இன்னும் ஒரு வாரத்தில் (அக்.21) நடைபெற உள்ளது. இதில் அரூர் மட்டுமே எல்டிஎப் வசம் இருந்தது. மற்ற 4 தொகுதிகளும் யுடிஎப் வெற்றி பெற்ற தொகுதிகளாகும். தற்போது இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மற்றும் உள்ள எல்டிஎப் தலைவர்களும், யுடிஎப், என்டிஏ தலைவர்களும் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்டிஎப் முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கியது. ஆனால், மற்ற இரு அணிகளிலும் வேட்பாளர் தேர்வில் தொடங்கிய புதிய மோதல்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் வெளிப்பட்டு வருகிறது.

1.    அரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் மனு சி புள்ளிக்கல் அனைத்து தரப்பு மக்களின் நல்லாதரவை பெற்று வருகிறார். இங்குள்ள மூத்த வாக்காளர்கள் மனுவை தங்களது மகன் (மனுவாணு ஞங்ஙள மகனாணு) எனக்கூறி வரவேற்பளிக்கிறார்கள். நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அரூர் மட்டுமே ஏற்கனவே எல்டிஎப் வெற்றி பெற்ற தொகுதியாகும். 2016இல் இங்கு வெற்றி பெற்ற ஏ.எம்.ஆரிப் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்தார். அதையொட்டி இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  

 

2 .      வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதி எல்டிஎப் வேட்பாளர் வி.கே.பிரசாந்த் சனியன்று திருவனந்தபுரம் நகரத்தின் பரபரப்புக்கு மத்தியில் மிகவும் உயரமான இடத்தில் உள்ள அழகான பகுதியான மலமுகளில் வாக்கு சேகரித்தார். பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கவும், அப்பகுதிகளை புனரமைக்கவும் திருவனந்தபுரம் மேயராக வி.கே.பிரசாந்த் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி அன்பான வரவேற்பளித்தனர்.

 

3.     மஞ்சேஸ்வரம் சட்டமன்ற தொகுதி கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, ஆர்எஸ்எஸ் என மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தி எல்டிஎப்புக்கு எதிரான அணிதிரட்டல் கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்தது.  இம்முறை கேரளத்தின் வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இடது ஜனநாயக முன்னணி அரசு காட்டும் மிகுந்த அக்கறை எல்டிஎப் வேட்பாளர் எம். சங்கர்ராய்க்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

 

4.    கோந்நி சட்டமன்ற தொகுதி எல்டிஎப் வேட்பாளர் கே.யூ.ஜனீஷ்குமாரை சாதாரண மக்களின் பிரதிநிதியாக கருதும் மக்கள், தங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும்போது பெருமளவிலான மக்கள் கூட்டமாக திரண்டு வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்பகுதிகளில் நடக்கும் வரவேற்புகள் திருவிழாபோல் காட்சியளிக்கின்றன. வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர்.

 

5.     எர்ணாகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான இடது ஜனநாயக முன்னணியின் சுயேச்சை வேட்பாளர் மனு ராய் சனியன்று கொச்சி இடையக்குணம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது அங்கு காத்திருந்த நான்காம் வகுப்பில் படிக்கும் அபினவ் டி சோஜன், தான் கைப்பட வரைந்த மனு ராயின் ஓவியத்தை வழங்கினார். அப்போது அங்கிருந்த பெண்கள் ‘மனு வரட்டும் மாற்றம் வரட்டும்’ என்று முழக்கமிட்டு வரவேற்பு அளித்தனர்.