tamilnadu

கூட்டுறவுத் துறையிலிருந்து சர்பாசி சட்டம் விலக்கப்படும்

திருவனந்தபுரம்,  ஜுன் 10- கடன் பெற்றவர்களிடமிருந்து சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான சர்பாசி சட்டம் கூட்டுறவுத்துறையிலிருந்து விலக்கப்படும் எனவும்  அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் கேரள சட்டமன்றத்தில்  மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.  கூட்டுறவுத்துறையில் சர்பாசி சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமல்படுத்தியது என கேரள சட்டமன்றத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் குறிப்பிட்டார். வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் பேசும்போது சர்பாசி சட்டத்தை ஒன்றுபட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். விவசாயிகள் கடன்களை  வசூலிப்பதை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இடுக்கி மாவட்டத்தில் 10, வயநாட்டு மாவட்டத்தில் 5 என கேரளத்தில் 15 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அமைச்சர் சுனில் குமார் தெரிவித்தார். விவசாயிகளின் தற்கொலை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி கொண்டு வந்த அவசர தீர்மானத்திற்கு பதிலளி்த்து பேசுகையில் அமைச்சர் இதை குறிப்பிட்டார். முதல்வர் மற்றும் துறை அமைச்சரின் விளக்கங்களின் அடிப்படையில் சபாநாயகர் அவசர தீர்மானத்துக்கு அனுமதி மறுத்தார். சபை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துவிட்டு இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெறும் விவசாயிகளுக்கு எதிராக வங்கிகள் சர்பாசி சட்டத்தை பயன்படுத்துவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை அமலாக்கியது பயிர் நாசம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் தற்கொலைக்கும் இது வழிவகுத்தது.

வாஜ்பாய் அரசின் சட்டம்
சர்பாசி (SíRFíESI -SecuritisatiHn abd RecHbstructiHn Hf Fibancial íssets abd EbfHrcemebt Hf Security Ibterest íctï 2002) என்கிற சட்டம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் விவசாயிகளின் பயிர் கடன்களை வசூலிக்க வங்கிகள்  இந்த சட்டத்தை பயன்படுத்தின. இது பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது.