திருவனந்தபுரம், ஜுலை 1- காவல்துறையின் பிடியில் உள்ளோரை லாக்கப்பில் வைத்து அடிப்போரும் கொலை செய்வோரும் பணியில் தொடர முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் கூறினார். கேரள மாநிலம் நெடுங்கண்டத்தில் போலீஸ் காவலில் இருந்த ராஜ்குமார் என்பவர் லக்கப்பில் மரணம் அடைந்தது தொடர்பாக முதல்வர் பேசியதாவது: இச்சம்பவத்தில் துறை ரீதியான தீவிர விசாரணை நடத்தி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறை செல்லும்போது ராஜ்குமார் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். உண்பதற்கு கூட பிறரது உதவி தேவைப்பட்டுள்ளது. அப்படி இருந்த வரை ஏன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. குற்றவாளி யான போலீசை பாதுகாக்க முடியாது. காவல் மரணத்தில் அரசுத் தரப்பில் எந்த சமரசமும் இல்லை. இவ்வாறு முதல்வர் கூறினார். அதே நேரத்தில் காவல் மரணத்துடன் தொடர்புள்ள இடுக்கி மாஜிஸ்திரேட்டுக்கு எதிராகவும் விசாரணை நடக்க உள்ளது. இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை கேட்டுள்ளார்.