tamilnadu

img

கேரளா: புதிய மோட்டார் வாகனச்சட்டம் தற்காலிக நிறுத்தி வைப்பு

கேரளாவில் புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பினராயி விஜயன் தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது. 

மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந்ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், தமிழகம் உட்பட 6 மாநிலங்கள், மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் கேரளாவில் 1ம் தேதி முதல் புதிய அபராத தொகை வசூலிப்பது அமல்படுத்தப்பட்டது.

அதனால் இந்த உத்தரவை எதிர்த்து கேரள மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகமாக வசூல் செய்யும் இந்த அபராத தொகை நிறுத்தி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உட்பட பலர் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து முதல்வர் பினராயி விஜயன், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் அபராத தொகை வசூலிப்பதால் போக்குவரத்து போலிஸாருக்கும் பொதுமக்களுக்குமான மோதல் போக்கு அதிகரிக்கிறது. எனவே, தற்போதைக்கு அபராத தொகை வசூலிப்பதை நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.