மழை வெள்ளத்தில் நாசமான பாடபுத்தகங்கள் புதிதாக வழங்க கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம், ஆக.13- கேரத்தில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை சீற்றத்தில் பாடபுத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சி.ரவீந்திரநாத் அறிவித்தார். பாட புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்கள் குறித்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சேகரித்து சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரி மூலம் பொதுக்கல்வி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ- மாணவியருக்கு பாடபுத்தகங்கள் உடனடியாக கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளு மாறு பொதுக்கல்விக்கான செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு இலவச ரேசன்
ஆலப்புழா, ஆக.13- மழை-வெள்ளம், இயற்கை பேரிடருக்கு உள்ளான குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசமாக ரேசனில் உணவுப் பொருட்கள் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அமைச்சர் பி.திலோத்தமன் செவ்வாயன்று கூறியதாவது: வெள்ளம் பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக மத்திய அரசிடம் கூடுதல் தானியங்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. மழையில் நாசமான ரேசன் கார்டுதாரர்களுக்கு நேரடி பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது
இராமேஸ்வரம்,ஆக.13- எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், திங்களன்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த கிங்ஸ்டன், இன்னாசி, நெல்சன், வில்லான் உள்ளிட்ட 6 மீனவர்களை கைது செய்து, அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.