குஜராத்தில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தபோது விஷவாயு கசிந்ததில் 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் வதோதரா நகரத்திற்கு 30 கி.மீ தொலைவிலுள்ள தபோய் தாலுக்காவின் ஃபர்குயி கிராமத்தில் தர்ஷன் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மகேஷ் பட்டன்வாடியா(47), அசோக் ஹரிஜன்(45), பிரிஜேஷ் ஹரிஜன்(23), மகேஷ் ஹரிஜன்(25) ஆகிய 4 துப்பரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மகேஷ் பட்டன்வாடியா என்பவர் கழிவுநீர் தொட்டியில் முதலில் இறங்கியுள்ளார். ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அசோக், பிரிஜேஷ், மகேஷ் ஹரிஜன் அடுத்தடுத்து தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். இந்நிலையில், துப்புரவு பணியாளர்கள் 4 பேரும் வெளியே வரவில்லை. இதைத்தொடர்ந்து சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் விஜய் சௌத்ரி(22), சஹதேவ் வாசுவா(22), அஜய் வசாவா(22) ஆகிய 3 பேரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக தொட்டிக்குள் இறங்கிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே விஷவாயு தாக்கியதன் காரணமாக மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். தகவலறிந்து வந்த தபோய் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், 7 பேரின் உடல்களையும் தொட்டியில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.