tamilnadu

சுனில் வழக்கை வன்கொடுமை கொலை வழக்காக மாற்றக்கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக. 11- ஓசூர் வட்டம் பாகலூர் அருகில் உள்ள  கொடியாளம் கிராமத்தை சேர்ந்த தலித் வாலிபர் சுனில் (22). அவரை கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சாதிவெறியர்கள் ஜனார்தன் (22), நவீன் (22), அனில் (19) ஆகியோர் கடந்த மாதம் 28ஆம் தேதி சாதியை சொல்லி திட்டி,  கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 4ஆம் தேதி  உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் நாகேஷ்பாபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். காவல் துறையினர் இந்த வழக்கை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொலை வழக்காக மாற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பாதிக்கப்பட்ட சுனில் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.