tamilnadu

img

சிபிஎம் தலையீட்டால் சாலை அடைப்பு அகற்றம்

கிருஷ்ணகிரி, ஆக. 2- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பிரதான சாலையில் அந்தேவனப்பள்ளியிலிருந்து மேற்கில் 4 கிலோ மீட்டரில் உள்ளது அயன்புரம்தொட்டி. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தால் மண் சாலை அமைக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக இருந்த சாம்ராஜ் தார் சாலை அமைத்தார். அந்த சாலை தற்போது பராமரிப்பின்றி கிடக்கும் நிலையில் கடந்த 28ஆம் தேதி அயன்புரம்தொட்டியில் வசிக்கும் ஒரு சிலர் ஊராட்சி சாலையை கல்தூண்களை நட்டும், பாறைக் கற்களை அடுக்கியும், மரத்தை வெட்டி குறுக்கே போட்டு அடைத்துள்ளனர். இந்த சாலை அடைப்பால் மடமத்திகிரி, காரண் டப்பள்ளி, முலுவனப்பள்ளி, தொட்ட பில்லு முத்திரை, பாலதோட்டனப்பள்ளி, மற்றும் ஜவலிகிரி வரை செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சாலையின் மறுபக்கம் உள்ள விவசாயி முருடப்பாவின் 6 ஏக்கர் நிலத்தில் உள்ள முட்டைகோஸ், தக்காளி, காய்கறிகள், பூக்களை பறித்து விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் செடியிலேயே காய்ந்து உதிர்ந்து 6 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.  

ஊராட்சி சாலை அடைப்பை அகற்ற வேண்டும் என முருடப்பா தேன்கனிக்கோட்டை காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் சாலையை அகற்றவும், அடத்தவர்கள்  மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேன்கனிக்கோட்டை வட்டக் குழுவிடம் பாதிப்படைந்த விவசாயி முருடப்பா முறையிட்டார். சாலையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சாம்ராஜ், வட்டச் செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்ட செயலாளர் அனுமப்பா, வாலிபர் சங்க நிர்வாகி சீனிவாசன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து வருவாய் அலுவலர், காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று சாலை அடைப்பை அகற்றினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி முருடப்பா கூறிகையில், இந்த சம்பவத்தால் தனக்கு 6 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. மேலும்  தன் பட்டா நிலப் பாதைக்கு மாற்றாக ஊர் மக்கள் நலன் கருதி அடுத்த பகுதியில் உள்ள தன் பட்டா நிலத்தில் மக்கள் சென்று வர 3 அடியை பொதுப் பாதையாக விட்டுத் தருவதாகக் கூறினார்.