tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் -லண்டன்- இன்று தொடக்கம்

விளையாட்டு உலகின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருவது கிரிக்கெட் போட்டி மட்டுமே. மற்ற விளையாட்டுகளில் சர்வதேச அந்தஸ்து பெறுவது எளிது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச அந்தஸ்து பெறுவது மிகவும் கடினம். ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இத்தகைய தனிச் சிறப்புடைய கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் (ஐசிசி) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவின் 12ஆவது கொண்டாட்டம் வியாழனன்று இங்கிலாந்து மட்டும் வேல்ஸில் தொடங்குகிறது.

அணிகள்

உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, விண்டீஸ் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக களமிறங்குகிறது. அதிகபட்சமாக ஆசியக் கண்டத்தில் 5 அணிகளும், ஆஸ்திரேலிய கண்டத்தில் 2 அணிகளும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகிய கண்டத்தில் தலா ஒரு அணிகளும் களமிறங்குகின்றன.

இந்தியா மகுடம் சூடுமா?

கோப்பை கைப்பற்றும் அணிகளில் ஒன்றான இந்திய அணி அசுர பலத்துடன் களமிறங்குகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்றாலும், வேகப்பந்துவீச்சில் சற்று திணறும். குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தின் பிட்ச் மையத்தை கண்காணிக்காமல் தேவையில்லாத ஷாட்களை அடித்து விரைவாக ஆட்டமிழப்பார்கள்.இதனை மாற்றிக்கொண்டால் தான் அரையிறுதிக்கு எளிதாக செல்லலாம். பந்துவீச்சு யூனிட் பலமாக இருப்பதால் பிரச்சனை இல்லை. புதிய வரலாறு படைக்க இந்திய அணி மீது தனி கவனம் செலுத்தி வரும் பாகிஸ்தானை கவனமாக கையலாளல் நல்லது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளை சமாளித்தால் கோப்பையை எளிதாக வெல்லலாம்.மொத்தத்தில் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இந்திய அணிக்கு பிரகாசமாக தான் உள்ளது.... 

மைதானம் மற்றும் போட்டிகள் 
லார்ட்ஸ், கென்னிங்டன் ஓவல்,டிரெண்ட் பிரிட்ஜ், சவுதாம்ப்டன், கார்டிப் (வேல்ஸ்), டவுன்டன், பிரிஸ்டல், மான்செஸ்டர், பிர்மிங்ஹாம், லீட்ஸ், செஸ்டர் லே ஸ்ட்ரீட் என மொத்தம் 11 மைதானங்களில் 48 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 46 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் தொடக்க ஆட்டம் லண்டன் ஓவலிலும், இறுதி போட்டி கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸிலும் நடைபெறுகிறது. 

சுற்று எப்படி?
உலகக்கோப்பையில் களமிறங்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதனை ரவுண்டு ராபின் (லீக்) சுற்று என்று அழைப்பார்கள். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
 

சீதோஷ்ண விளைவுகள்
பிரிட்டனில் தற்போது வெயில் காலமாகும். மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் ஆகியவற்றின் மூலம் மழைபெய்ய அதிக வாய்ப்புள்ளது. இங்கிலாந்து மைதானங்கள் வெயிலுக்கு நன்கு உலர்ந்து பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். மழை, மேகமூட்டம், காற்றின் ஈரப்பதம் ஆகியவை அதிகமாக இருந்தால் பந்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும். சொல்லப்போனால் பந்து தாறுமாறாக எகிறி முகத்தை முத்தமிடும். 
 

பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.28 கோடி வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 14 கோடியும், அரையிறுதியில் வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ. 5.6 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது. லீக் சுற்றுடன் கிளம்பும் 6 அணிகளுக்கு தலா ரூ. 70 லட்சமும்,ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 28 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
 

கோப்பை யாருக்கு?
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பைக்காக கங்கணம் கட்டி வருகின்றன. வெயில் கால சீதோஷ்ண நிலை மேகமூட்டத்தால் ஈரப்பதமாக மாறினால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு கூடுதல் சாதகமாக அமையும்.  
 

சேனல்கள் 
இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் என அழைக்கப்படும் அரசுத்துறை சேனல் ஆகிய இரண்டு சேனல்களும்  உலகக்கோப்பை தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்தியா விளையாடும் ஆட்டத்தை மட்டுமே காணலாம். இந்தியா விளையாடாவிட்டாலும் அரையிறுதி, இறுதி ஆட்டம் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். 
 

நடுவர்கள்  
உலகக்கோப்பை தொடரில் 16 பேர் கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சுந்தரம் ரவி என்பவர் மட்டுமே நடுவராக களமிறங்குகிறார். அதிகபட்சமாக இங்கிலாந்தில் 5 பேரும், ஆஸ்திரேலியாவில் 4 பேரும், இலங்கையில் 2 பேரும், நியூஸிலாந்து, விண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவரும், போட்டி நடுவர்களாக களமிறங்குகின்றனர்.  
 

இவர்களுக்கு கடைசி? 

வயது மூப்பினால் கீழ்கண்ட 6 நபர்கள் நபர்களுக்கு இது தான் கடைசி உலகக்கோப்பை தொடர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகக்கோப்பை நிறைவு பெற்றவுடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிற்கும் முழுக்கு போட அதிக வாய்ப்பு உள்ளது.  
மஹேந்திர சிங் தோனி (இந்தியா)
ஹாசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா)
கிறிஸ் கெய்ல் (விண்டீஸ்)
டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா)
ராஸ் டைலர் (நியூஸிலாந்து) 
இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா) 
 

அபாயகரமான அணிகள் 
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளுடன் இமைகள் அசையாமல் சிறப்பு கண்காணிப்புடன் கவனமாக விளையாட வேண்டும். சற்று அசந்தால் பாடை கட்டி விடுவார்கள்.இதில் முக்கியமான அணி ஆப்கானிஸ்தான் தான். பயிற்சி ஆட்டத்தில் அசமந்தமாக விளையாடிய பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்துவிட்டது.