பிசிசிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் வரும் 29-ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடரை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அச்சம் கொள்கின்றன. இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் ஐபிஎல் தொடரை நடத்தும் பொழுது கொரோனா வைரஸ் எளிதாக பரவிவிடும் என்பதை காரணம் காட்டி அலெக்ஸ் பென்சிகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு வியாழனன்று அவசர வழக்காக விசாரித்தது. “ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கொரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.