ஜமைக்கா டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் முந்தைய நாள் இரவு சரியாகத் தூங்கவில்லை. ஏனென்றால் 2-வது நாளின் முதல் பகுதியில் விண்டீஸ் வீரர்கள் முழு முயற்சியோடு ஆக்ரோஷமாகப் பந்து வீசுவார்கள். இதனால் சற்று தயக்கத்துடன் பேட்டிங் செய்தேன். 2-வது நாளின் முதல் பந்திலேயே ரிஷப் ஆட்டம் இழந்ததும் பொறுப்பை உணர்ந்து ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி ஒரு வழியாகச் சதத்தைப் பூர்த்தி செய்தேன். சதமடித்து எனக்குக் கிடைத்த எல்லா பெருமைக்கும் இஷாந்த் சர்மா தான் காரணம். அவர் இல்லாவிட்டால் என்னால் இந்த சதத்தை அடித்திருக்க முடியாது. என்னை விடக் கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் இஷாந்த் சர்மா செயல்பட்டார். என்னுடைய 12 வயதில் எனது தந்தை காலமாகிவிட்டார். எனது முதல் சர்வதேச சதத்தைத் தந்தைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். எனவே இந்த சதம் அவருக்குரியது. இன்றைய நாள் எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. எனது தந்தை எங்கிருந்தாலும் அவரை நான் பெருமைப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி அளித்த பேட்டியிலிருந்து...