நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வழக்கத்திற்கு மாறாக வெளிர் நீல நிறத்தால் ஆன ஜெர்சியுடன் களமிறங்கியது. இந்திய அணியின் ஜெர்சியை போன்று இருப்பதால் இந்நிகழ்வு சர்ச்சை யாக வெடித்தது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்திற்கு விலக்கு இருப்பதால் அந்த அணிக்கெதிரான ஆட்டத்தில் மட்டும் ஜெர்சியை மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) உத்தரவிட்டது. ஜெர்சியை மாற்றப் பல வண்ணங்களில் ஆன மாதிரி ஜெர்சியை இந்திய அணிக்கு ஐசிசி கொடுத்தது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் காவி வண்ணத்தில் அடங்கிய ஜெர்சியை தேர்வு செய்தது. கேளிக்கை அம்சமான கிரிக்கெட் விளையாட்டிலும் அரசியல் சார்பான காவி வண்ணத்தை நுழைக்க மோடி அரசு முயல்வதால் இந்திய கிரிக்கெட் உலகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.கிரிக்கெட்டிலும் காவியா என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆளும் பாஜக கட்சியை எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்தனர்.