tamilnadu

img

ஐபிஎல் தொடர் ரத்து?

சிக்கலில் ஸ்டார், விவோ நிறுவனங்கள்

நடப்பாண்டிற்கான ஐபிஎல் சீசன் வரும் 29-ஆம் தேதி தொடங்குவதாக அட்டவணை தயாரிக்கப்பட்டி ருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்தில் கொரோனாவின் தாக்குதலை  பொறுத்து அடுத்து எப்பொழுது ஐபிஎல் தொடர் தொடங்கும் என்பது முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்ஸர் நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. குறிப்பாக ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நடப்பாண்டு ஐபிஎல் சீசனுக்கான தொகையை டெபாசிட் செய்துள்ளன. ஒருவேளை ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்த தொகை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.   

நிறுவனங்கள் மற்றும் தொகை

ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு ஸ்டார் குழுமம் வருடத்திற்கு ரூ. 1,400 கோடி செலுத்த வேண்டும். மொத்தம் 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ள ஸ்டார் நிறுவனம் நடப்பாண்டுக்கான ஒளிபரப்பு தொகையை செலுத்திவிட்டது. இதேபோல ஐபிஎல் ஸ்பான்ஸராக உள்ள சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் என்ற ஸ்மார்ட்போன் நிறுவனமும் இந்த வருடத்திற்கான 440 கோடி ரூபாயை செலுத்திவிட்டது. தற்போது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி நடக்குமா இல்லை ரத்து செய்யப்படுமா என்ற சிக்கலான சூழல் இருப்பதால் ஸ்டார் மற்றும் விவோ நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும் தாங்கள் கட்டிய தொகை திரும்ப கிடைக்குமா என்ற அச்சத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன. ஒருவேளை ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படும் பட்சத்தில்  இன்சூரன்ஸ் மூலம் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் உடனடியாக கிடைக்காது என்பதால் ஸ்டார் மற்றும் விவோ நிறுவனங்கள் சிக்கலில் விழித்து வருகின்றன.