நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர்
நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் செவ்வாயன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி கே.எல். ராகுலின் (112), ஸ்ரேயாஸ் ஐயர் (62) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பென்னெட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடக்க வீரர்களின் (குப்தில் (66), நிக்கோல்ஸ் (80))அசத்தலான ஆட்டத்தால் வெற்றி இலக்கை ஜெட் வேகத்தில் நெருங்கியது. எனினும் மற்ற மிடில் ஆர்டர் வீரர்களின் சொதப்பலால் நடுப்பகுதியில் சற்று திணறியது. இறுதிக்கட்டத்தில் அபாயகரமான ஆல்ரவுண்டரான கிராந்தோம்மியின் (58 ரன்கள் - 28 பந்துகளில்) அதிரடி ஆட்டத்தால் 47.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. டி-20 தொடரில் ஒயிட் வாஷ் ஆனதை பற்றிக் கண்டு கொள்ளாமல் ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் செய்த நியூஸி லாந்து அணியை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.