tamilnadu

img

கண்ணீரோடு விடைபெற்ற ‘பஞ்சாப் சிங்கம்’!

கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முழுக்க இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பையை நோக்கியே உள்ளது. துவக்கத்திலேயே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது வங்கதேசம். அதிலிருந்து இன்னமும் தென் ஆப்பிரிக்கா மீளாமல் தத்தளித்து வருகிறது. எதிர்பார்த்ததைப் போன்று நியூசிலாந்து, இந்தியா வீரர்களின் பந்து வீச்சும், ரன் குவிப்பும் அபாரமாக உள்ளது. தொடக்கத்தில் சற்று தடுமாறிய இங்கிலாந்து எழுச்சி பெற்றுள்ளது.  நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்து வருகிறார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். மறுபுறத்தில், மழை தனியாக ஒரு இன்னிங்சை ஆடி வருகிறது. வீரர்களின் காயம் தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது.  இத்தகைய, பரபரப்புகளுக்கிடையே யுவராஜ் சிங்கின் பிரியாவிடை ரசிகர்களை கண்ணீர் குளத்தில் மூழ்கடித்துவிட்டது.
விளையாட்டுத்துறையில் ஓய்வு என்பது அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும்  சிலரது ஓய்வு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்கிறது. அந்த பட்டியலில் யுவராஜ் சிங்கும் ஒருவர். காரணம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால்  “யுவி,யுவி” என்று அழைக்கப்பட்டார். அதிரடிக்கு பெயர் போனவர். இந்தியா அணியின் மேட்ச் வின்னர். சுமார் 25 ஆண்டு காலம் ராஜ்ஜியம் செலுத்தி வந்த அவர் கனத்த இதயத்துடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். 

பீனிக்ஸ் பறவை...
இந்திய கிரிக்கெட் அணியின் ‘ஆல்ரவுண்டர்களில்’ முதன்மையானவர் யுவராஜ் சிங். 1981ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் யோகராஜ் சிங்-ஷிப்னம் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு தம்பி. இளம் வயதில் டென்னிஸ் மீதும், ஸ்கேட்டிங் மீதும் ஆர்வமாய் இருந்த யுவராஜ் சிங்கை கிரிக்கெட் பக்கம் திருப்பிவிட்டதே கிரிக்கெட் வீரரான அவரது தந்தைதான். 1999-2000 சீசனில் பஞ்சாப் அணிக்காக ரஞ்சி கோப்பை களமிறக்கப்பட்டபோது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அபார திறமைக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட இடம் கிடைத்தது. 2003-ல் நடந்த ஐசிசி உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிபோது ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் திணறினார். ஆனால் யுவராஜ் நம்பிக்கை இழக்கவில்லை. தொடர்ந்து பயிற்சி பெற்று மீண்டும் அணிக்குள் நிரந்தர இடத்தை பிடித்தார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை வெல்ல தூணாக நின்றார். 362 ரன்கள் குவித்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்றார். அதற்குள்ளாக நுரையீரல்களுக்கு நடுவில் பந்து வடிவிலான புற்று நோய் கட்டியால் பெரிதும் அவதிப்பட்டார். ஒருமுறை மைதானத்தில் ரத்த வாந்தியும் எடுத்தார். இதை பார்த்த ரசிர்களின் மனம் நொறுங்கியது. பின்னர் அவர் மேற்கொண்ட ‘ஹீமோதெரபி’ சிகிச்சையால் தலை முடிகள் அனைத்தும் உதிர்ந்தது. நடக்கவே சிரமப்பட்டார். உலக சாம்பியனாக வலம் வந்தவரை மீண்டும் சறுக்கல்கள் சந்தித்தன. தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அப்போதும் மனம் தளரவில்லை. யுவராஜ் இல்லாத இந்திய கிரிக்கெட்டை ரசிகர்களால் மட்டுமல்ல, அவரது நண்பர்களாலும் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த கொடிய நோயிலிருந்து மீண்டு வர முடியுமா? என எழுந்த கேள்விகளுக்கு முடியும் என்றார். டி20 உலகக் கோப்பையில் இடம் பிடித்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி ஃபீனிக்ஸ் பறவையாக எழுச்சி பெற்று தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். பின்னர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப், தில்லி, பெங்களூரு என பல அணிக்காக விளையாடினார். 2015ஆம் ஆண்டு ஏலத்தில் அவரை அதிகபட்சமாக ரூ.16 கோடிக்கு தில்லி அணி வாங்கியது.

மறக்க முடியுமா?
2007 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி கிரிக்கெட் உலக வரலாற்றில் மறக்க முடியாத நாளாகும். தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி 20 ஓவர் உலகக் கோப்பையின் சூப்பர் 8  பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தின் பிளின்டாப் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விளாசிய யுவராஜ் சிங்கை வம்பிழுத்தார். சினம் கொண்ட வேங்கையாக மாறிய சிங்,  ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்துகளை மைதானத்தின் நாலா புறமும் சிதறடித்து ருத்ர தாண்டவம் ஆடினார். தொடர்ச்சியாக 6 சிக்சர் அடித்து கலங்கடித்தார். மெய் சிலிர்க்க வைத்த அந்த உலக சாதனையை அவர் மட்டுமல்ல உலக  ரசிகர்களும் எளிதில் மறக்க முடியாது.

உலக நாயகன்!
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் 15 வயதில் விளையாடி தொடர் நாயகன் விருதை தட்டி வந்தார். அடுத்த உலகக் கோப்பையிலும் விளையாடினார். இரண்டு முறையும் இந்திய அணி கோப்பையை வென்றது. 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும் 2011 சர்வதேச ஒருநாள் உலக கோப்பையிலும் பங்கேற்ற ஒரே வீரர். 

16 ஆண்டுகள்...
இடதுகை மட்டை வீச்சாளரான யுவராஜ் சிங், தனது 19 ஆவது வயதில் இந்திய அணிக்குள் நுழைந்தார். முதல் ஆட்டத்திலேயே அரை சதம் விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டி வந்தார். கென்யாவுக்கு எதிராக ஆடத் துவக்கிய யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தோடு முடிவுக்கு வந்தது.  ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 27 முறை ஆட்டநாயகன் விருதை வென்று சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலித்தார். ஆனாலும், மீண்டும் அணிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் அவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது. பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்த அவரது கிரிக்கெட் வாழ்க்கை 37வது வயதில் நிறைவடைந்துள்ளது. இந்த முடிவை கண்ணீரோடு அறிவித்தார்.

400 போட்டிகள்...
1995-96 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் அணியில் 13 வயதில் விளையாடத் துவங்கிய யுவராஜ் சிங், அடுத்த ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் இடம் பிடித்தார். ஒருநாள் தொடரில் 304 ஆட்டங்களில் 8,701 ரன்கள் குவித்த அவர், 111 விக்கெட்டுகளையும் சாய்த்திருக்கிறார். டி 20 தொடரில் 58 ஆட்டங்களில் ஆடியிருக்கும் இவர் 1,117 ரன்களும், 40 டெஸ்ட் போட்டிகளில் 1,900 என ஒட்டுமொத்தமாக 11 ஆயிரத்து 378 ரன்கள் எடுத்திருக்கிறார். ஓய்வு பெறுவது கடினமான முடிவுதான் என்றாலும்  சர்வதேச அரங்கில் தேசத்திற்காக விளையாட வாய்ப்பு கிடைத்த போது ரத்தம், வியர்வை சிந்தி வெற்றிக்கு போராடினார். இந்திய அணிக்காக 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அவருக்கு அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி பெருமைபடுத்தியிருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும்போது கடைசியாக ஒரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கொடுத்து உரிய கவுரவத்துடன் விடைபெற வைத்திருக்க வேண்டும் என்பதே மில்லியன் ரசிகர்களின் விருப்பமாகும்.