12-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்றது இங்கிலாந்து அணியாக இருந்தாலும், ரசிகர்களின் மனதை வென்றது நியூஸிலாந்து அணி தான். கடைசி வரை போராடியும் ஐசிசி-இன் விதியின் படி கோப்பையை நழுவவிட்ட நியூஸிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்நிலையில் நியூஸிலாந்து அணிக்காக சூப்பர் ஓவர் வரை போராடிய அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் டுவிட்டர் பக்கத்தில் வித்தியாசமாகக் கோரிக்கை வைத்துள்ளார். அதில்,”கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் நினைத்ததை எங்களால் நிறைவேற்ற இயலவில்லை, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி 10 நிமிடங்கள் குறித்து நினைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணுகிறேன். குழந்தைகளிடம் ஒரேயொரு கோரிக்கையை முன்வைக்கிறேன். பேக்கரி கடை வைப்பது உள்ளிட்ட இதர செயல்களில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியுடன் வாழ முயற்சி செய்யுங்கள். தயவு செய்து எந்த விளையாட்டை யும் (கிரிக்கெட்) வாழ்க்கையாகத் தேர்வு செய்து விடாதீர்கள்” என வேதனையுடன் கூறியுள்ளார்.